டி20ல் இருந்து சீனியர்கள் ஓய்வா??.. ரோகித் சர்மா வெளிப்படை பதில்.. அப்போ எல்லாம் பொய்யா கோபால்?
கவுகாத்தி: இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து பேச செய்தியாளர்களை சந்தித்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, இனி டி20 கிரிக்கெட்டில் சீனியர் வீரர்கள் விளையாட மாட்டார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
டி20 தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையில் வென்ற சூழலில் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு கேப்டன் ரோகித் சர்மா அணிக்குள் இணைந்துள்ளார். இதே போல கோலி போன்ற மற்ற சீனியர் வீரர்களும் அணிக்குள் வந்துள்ளார்.

உலகக்கோப்பையின் திட்டம்
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இனி டி20 அணியில் இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போலவே விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டிருந்தது. இவர்கள் இனி டி20க்கு வரவே மாட்டார்கள் என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ரோகித் சர்மா விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். அதில், முதலில் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளுங்கள். ஒரு வீரரால் அனைத்து போட்டிகளிலும் ஆட முடியாது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்து எப்படி விளையாடுவது. ஓய்வு தேவை அவ்வளவுதான். அதற்காக இனி டி20ல் விளையாட மாட்டேன் என்றெல்லாம் கிடையாது.

அடுத்தடுத்த தொடர்கள்
அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இருக்கிறது. அதன்பின்னர் ஐபிஎல், மற்ற டி20 தொடர்கள் இருக்கிறது. அதில் பார்த்துக்கொள்ளலாம். ஒருபோதும் நான் பின் வாங்க மாட்டேன். நிச்சயம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவேன். ஒரு வீரர் ஓய்வில் இருந்தால், ஓய்வு பெற்றுவிட்டோம் என்று அர்த்தம் இல்லை என ரோகித் சர்மா தெரிவித்தார்.

ஓப்பனிங் இடத்தில் யார்?
தொடர்ந்து பேசிய அவர், ஓப்பனிங்கில் இடத்தில் சுப்மன் கில், இஷான் கிஷான் இருவரில் யார் இறங்குவார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அதில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்க தான் யோசித்து வருகிறோம். பெரும்பாலும் அவர் தான் ஓப்பனிங்கிற்கு களமிறங்குவார் என ரோகித் சர்மா கூறியுள்ளார். மறுபுறம் இஷான் கிஷான் சமீபத்தில் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications