மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. ஹிட்மேன் என ரோகித் சர்மாவை ரசிகர்கள் அழைப்பார்கள். மும்பை அணியில் சொத்தாக விளங்கும் ரோகித் சர்மா கடந்த சில சீசனங்களில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு சீசனில் ரோகித் சர்மா பதினாறு போட்டிகளில் விளையாடி வெறும் 268 ரன்கள் தான் அடித்து இருந்தார். இதில் அதிகபட்சமாகவே 48 ரன்கள் தான் சேர்த்தார். இதில் ஒரு அரை சதம் கூட கிடையாது. சராசரியே 19 ரன்கள் தான்.

இதன் காரணமாக மும்பை அணி கடந்த சீசனில் படுதோல்வி தழுவியது. இந்த சீசனிலும் ரோகித் சர்மா மோசமாக தான் விளையாடி வருகிறார். இதுவரை 11 போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 191 ரன்கள் மட்டும் தான் அடித்திருக்கிறார். இதில் சராசரி 17 ரன்கள் என்ற மோசமான அளவில் இருக்கிறது.
கடைசியாக ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் விளையாடிய ஐந்து இன்னிங்ஸில் மொத்தமாகவே 12 ரன்கள் தான் அடித்திருக்கிறார்
இதில் இரண்டு டக் அவுட்டுகள் அடங்கும். 2,3,0,0, 7 என பழைய காலத்து லேண்ட்லைன் நம்பர் போல் ஸ்கோரை அடித்திருக்கிறார் ரோகித் சர்மா. இன்றைய ஆட்டத்திலும் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நெருக்கடியான கட்டத்தில் மும்பை அணி களம் இறங்கியது.
இதில் ரோகித் சர்மா எட்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஏழு ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஃபெவிலியன் திரும்பினார். இதன் மூலம் மும்பை அணி தடுமாறியது. ஏற்கனவே ரோகித் சர்மா மீது ரசிகர்கள் விரக்தியில் உள்ள நிலையில் தற்போது கடந்த சில இன்னிங்சில் அவர் சொதப்புவது மும்பை அணி நிர்வாகத்தை கடுப்படைய செய்திருக்கிறது.
இதனால் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கி விடலாமா என்ற யோசனையில் அவர்கள் இருக்கிறார்கள். இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், ரோகித் சர்மா ஓய்வு எடுத்துக் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.