மும்பை: டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ரோஹித் சர்மாவின் எதிர்காலத்துக்கு முடிவுரை எழுதி விட்டதாக கூறப்படுகிறது. அவர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சுப்மன் கில் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது, இந்த மாற்றத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் இதை நகைச்சுவையாக "GA-AG ஆர்டர்" (கௌதம் - அஜித்) என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
இதன் மூலம், கம்பீர் மற்றும் அகர்கர் கூட்டணி, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை வெளியேற்றுவதில் இவர்கள் குறியாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. அந்த அணியில் ரோஹித் மற்றும் கோலி இருவரும் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், 2027-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் அவர்கள் பங்கேற்பது குறித்து, தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் எந்தவிதமான உறுதியான பதிலையும் அளிக்கவில்லை.
கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் இருவரும், "ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் 2027 உலகக்கோப்பைக்கான திட்டங்களில் இல்லை" என்பதில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இருவரும் ஒரேயொரு சர்வதேச வடிவத்தில், அதாவது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாலும், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாதங்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதாலும், 2027 உலகக்கோப்பை வரை தங்களது ஃபார்மைத் தக்கவைத்துக் கொள்வது கடினம் என்று அவர்கள் நம்புவதாகக் கூறப்படுகிறது.

ஒருநாள் அணிக்குத் தொடர்ந்து தேர்வாக வேண்டுமானால், சர்வதேசப் போட்டிகள் இல்லாத நேரத்தில் கோலியும், ரோஹித்தும் விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடி, தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று அகர்கர் எதிர்பார்க்கிறார். ஆனால், அவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுகுறித்து அகர்கர் கூறும்போது, "வீரர்கள் ஓய்வில் இருக்கும்போது, உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதை நாங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தெளிவாகக் கூறி வருகிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உங்களை நீங்களே கூர்மையாக வைத்துக் கொள்ள இதுதான் ஒரே வழி," என்றார்.
ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் குறித்து அகர்கர் மற்றும் கம்பீர் கூட்டணிக்கு அதிக கவலைகள் இருப்பதாகவும், 2027 வரை அவரால் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் நம்புவதாகவும், மறுபுறம், விராட் கோலியின் ஃபிட்னஸ் கேள்விக்கு அப்பாற்பட்டது எனவும் அவர்கள் கருதுகின்றனர். எனவே, ரோஹித்துடன் ஒப்பிடும்போது, கோலியின் நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை.
"ரோஹித்துடனான ஒப்பீட்டில், கோலிக்கு உலகக்கோப்பையில் இடம்பிடிக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கலாம் என்று அகர்கரின் தேர்வுக் குழு கருதுகிறது" என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தற்போதைக்கு, இந்த இருபெரும் வீரர்களிடமிருந்தும் அணி எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்: ஆஸ்திரேலியாவில் ரன் குவிப்பது. அதை செய்யாவிட்டால் அதுவே ரோஹித் சர்மாவின் கடைசி தொடராக அமையும். விராட் கோலிக்கு மேலும் சில தொடர்களில் ஆட வாய்ப்பு அளிக்கப்படலாம்.