மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றவுடன் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார். டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா எப்படி சர்வதேச t20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றாரோ, அதே போல் சாம்பியன்ஸ் தொடரை வென்ற பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரோகித் சர்மா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து தாம் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும், தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்றும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு வரும் ஏப்ரல் மாதம் வந்தால் 38 வயது ஆகிவிடும். அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதால், அப்போது ரோகித் சர்மாவுக்கு வயது 40 ஆகி விடும்.
அதுவரை ரோகித் சர்மாவால் விளையாட முடியுமா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் ரோகித் சர்மா தாம் 40 வயது வரை விளையாட ஒரு சிறப்பு திட்டத்தை திட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி தான் உடல் தகுதியுடனும், நல்ல பேட்டிங் ஃபார்ம் உடன் இருக்க மும்பை அணியில் தம்முடன் விளையாடிய அபிஷேக் நாயரை உதவிக்கு அழைக்க ரோஹித் சர்மா முடிவு எடுத்திருக்கிறார்.
தான் எந்த மாதிரி உணவை உண்ண வேண்டும். எந்த உடல் பயிற்சி செய்ய வேண்டும். எப்படி பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும். எவ்வளவு ஓய்வு எடுக்க வேண்டும். இது போன்ற பல்வேறு விஷயங்களை அபிஷேக் நாயரிடம் ஒப்படைக்க ரோகித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
இந்திய அணியில் தற்போது துணைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் உள்ள நிலையில், ராகுல் ஸ்ரேயாஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு அபிஷேக் நாயர் உதவி செய்திருக்கிறார். இந்த வரிசையில் தற்போது ரோகித் சர்மாவும் இணைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு என்று தனி பயிற்சியாளர்கள் வைத்து செயல்படுவது என்பது புதிதல்ல.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு வருவதற்கு முன்பு விராட் கோலியே சஞ்சய் பங்கருடன் பயிற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் டிராபி முடிவுடைந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் ரோகித் சர்மா தனது அடுத்த குறிக்கோளை நோக்கி சென்றுவிட்டார் என கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.