கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாட்டுக்காக சாதிக்க வேண்டும் என பல வீரர்களும் தங்களது 200 சதவீத உழைப்பை கொடுத்து வருகிறார்கள். மேலும் சில வீரர்கள் ஏதேனும் காயம் அடைந்தால் கூட அதனை பொருட்படுத்தாமல் ஆடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டியில் ரோகித் சர்மா தனி ஆளாக நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அப்போது அந்த ஆட்டத்திற்கு தயாராகவும் ரோகித் சர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர் அந்தப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்றும் செய்திகள் வெளியானது.

ஆனால் ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். இந்த நிலையில் தற்போது ரோகித் சர்மாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ரோகித் சர்மா கையில் கட்டு கட்டிக்கொண்டு இருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் உண்மைதான் என்றும் அந்த காயத்தை கூட பொருட்படுத்தாமல் ரோகித் சர்மா விளையாடி வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்று 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது சொந்த மண்ணில் நடைபெறுவதால் இம்முறை உலகக் கோப்பையை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதனால் இந்த காயத்தை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என ரோகித் சர்மா வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டு அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருவது பற்றி தற்போது தெரிய வந்துள்ளது.வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது தான் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதில் பயப்படும் படி ரோகித் சர்மாவுக்கு காயம் இல்லை என்றாலும் மருத்துவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் உலக கோப்பையில் தனது பங்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்த ரோகித் சர்மா இந்த வலியெல்லாம் பொருட்படுத்தாமல் கையில் கட்டு போட்டுக்கொண்டு இருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த கடின உழைப்பை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போய் இருக்கிறார்கள்.