கொழும்பு: ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு அஜித் அகர்கர் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி நாளை நடக்கவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடக்கவுள்ளதால், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் உள்ளிட்டோர் ஒளி வெளிச்சத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் நாளை ஆட்டத்தில் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொழும்பு ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, ரன்கள் சேர்ப்பதும் எளிதாக இருக்காது. இதனால் 3வது ஸ்பின்னர் அத்தியாவசிய தேவையாக இருக்கிறார்.
குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா முதன்மை ஸ்பின்னர்களாக உள்ள நிலையில், 3வது ஸ்பின்னராக அக்சர் படேல் செயல்பட்டார். ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் கைகளில் காயம் ஏற்பட்டது. இதனால் இறுதிப்போட்டியில் அக்சர் படேல் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து கொண்டுள்ளது இந்திய அணி.
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் திடீரென அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆசியக் கோப்பை இறுதியில் இந்திய அணியின் காம்பினேஷன், அக்சர் படேலின் காயம், அவரது இடத்தில் விளையாடப் போவது யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்கள் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.