ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? மவுனத்தை கலைத்த பிசிசிஐ.. ஒரே போன் காலில் மாறிய காட்சி
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி ரோஹித் சர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்காது என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின. 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் திட்டங்களில் 39 வயதான ரோஹித் சர்மாவுக்கு இடமில்லை என்று கூறப்பட்டது, சுப்மன் கில்லுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்குவதற்கு இளம் வீரர்களைத் தேடி வருவதாகவும் தேர்வுத் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் ரோஹித்திடம் இதனை தெரிவித்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே 2025-ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர் தற்போதைய ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ரோஹித் உடனடியாக ஓய்வு பெற விரும்பவில்லை என்றும், நிர்வாகத்தின் இந்த முடிவு குறித்து விவாதிக்க பிசிசிஐ அதிகாரிகளை அவர் அணுகியதாகவும் தகவல்கள் வெளியாயின.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா "ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து ஊடகங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரோஹித் தனது கடைசி ஆட்டத்தை விளையாடுவார் என்பது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரோஹித் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் வழக்கமான வீரர் ஆவார். அவர் அணியின் திட்டங்களில் இருக்கும் வரை தொடர்ந்து நாட்டிற்காக விளையாடுவார். சுருக்கமாகச் சொன்னால், லார்ட்ஸ் ஒருநாள் போட்டி அவரது கடைசி போட்டியாக இருக்காது" என்று விளக்கமளித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டில் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் சற்றே மோசமாக உள்ளது. காயங்கள் காரணமாக அவரது ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த எட்டு போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அவர் அடித்துள்ளார். இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தியது மட்டுமில்லாமல், 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதை இலக்காகக் கொண்டு தனது உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ள அவர் தொடர்ந்து கடுமையாக முயன்று வருகிறார்.


Click it and Unblock the Notifications

