“ரோஹித் கடைசி போட்டியில் கூட 130 ரன் எடுத்தார் அப்படி இருக்கும் போது..”.. பிசிசிஐ செயலாளர் பேச்சு
மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிசிசிஐ உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு பேசுகையில் அவர் இந்த சர்ச்சை குறித்து பதில் அளித்தார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில், டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தேசிய சிறப்பு பயிற்சி மையத்தின் தலைவர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 2027 உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்காக இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு பின் ரோஹித் சர்மா நீக்கப்படுவார் என பரவிய வதந்திகளைச் சைக்கியா திட்டவட்டமாக மறுத்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், "ரோஹித் அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த போட்டியில் (லார்ட்ஸ் போட்டி) கூட அவர் 130-140 ரன்கள் எடுத்தார். அப்படி இருக்கும்போது இந்த வீண் வதந்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை" என்றார்.
மேலும், பல வீரர்கள் காயத்தில் சிக்குவது பற்றியும் அவர்களின் பணிச்சுமை குறித்தும் பேசிய பிசிசிஐ செயலாளர், "ஐபிஎல் தொடரில் 2 மாதங்கள் விளையாடிய பிறகு இங்கிலாந்து சென்ற 15 வீரர்கள் கொண்ட அணியில் 3 அல்லது 4 வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு கிரிக்கெட் அட்டவணையில் வீரர்கள் போதுமான அளவு ஓய்வெடுக்கவும், செனா (SENA - தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பாகப் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.
மேலும், தேசிய சிறப்பு பயிற்சி மையத்தின் விளையாட்டு அறிவியல் துறைத் தலைவர் பதவி காலியாக இருந்தாலும், அங்குள்ள உடற்தகுதி மற்றும் மறுவாழ்வு வசதிகளை கவனிக்க 16 தகுதி வாய்ந்த நபர்கள் ஏற்கனவே பணியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications

