"ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் கொண்டாடுங்கள்.. ஏன் சோகமா இருக்கீங்க?" - முன்னாள் கேப்டன் கபில் தேவ்
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியுடன் மூத்த வீரர் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாகப் பரவி வரும் செய்திகளுக்கு மத்தியில், "அவரது ஓய்வைக் கொண்டாடுங்கள்" என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறி இருக்கிறார் .
லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 19 அன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தான் ரோஹித்தின் கடைசிப் போட்டியாக இருக்கும் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அவரது ஃபார்ம் சரிவைடந்து இருக்கும் நிலையில் 2027 உலகக்கோப்பை தொடருக்கு முன் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ரோஹித் சர்மாவை இந்திய அணி நிர்வாகம் புறக்கணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் ரோஹித் சர்மா லார்ட்ஸ் ஒருநாள் போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து கபில் தேவ் பேசுகையில், "நாம் ஏன் சோகமாக இருக்க வேண்டும்? அவர் நமக்குக் கடந்த காலங்களில் எவ்வளவோ மகிழ்ச்சிகரமான தருணங்களை கொடுத்துள்ளார்.
ஒருநாள் எல்லாரும் விடைபெறத் தான் வேண்டும். சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் என அனைவரும் ஒருநாள் ஓய்வு பெற்றார்கள். எனவே, ரோஹித் விடைபெறும்போது நாம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். இந்தியாவிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் அவர் கொடுத்த சிறந்த பொழுதுபோக்கிற்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய கபில் தேவ், "ரோஹித் ஒருநாள் ஓய்வு பெற்றுதான் ஆக வேண்டும். ஒருவேளை இந்தப் போட்டியே அவரது கடைசி போட்டியாக இருந்தால், அவர் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சதம் அடித்து கம்பீரமாக விடைபெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்" என்று கூறி இருக்கிறார்.
கடந்த 2007 ஜூன் 23 அன்று அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார் ரோஹித் சர்மா. சுமார் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வரும் அவர், ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரா? அல்லது 2027 உலகக்கோப்பை வரை விடா முயற்சியுடன் இருப்பாரா? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications
