மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்தியா இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. தோனிக்குப் பிறகு டி20 உலக கோப்பையில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார்.
37 வயதான ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு தான் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. அப்போது ரோகித்துக்கு 39 வயதாகிவிடும்.

தற்போது தன்னுடைய கடைசி கிரிக்கெட் வாழ்க்கை பக்கத்தில் இருக்கும் ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
இரண்டு வீரர்களும் தற்போது பெரும் அளவில் டி20 கிரிக்கெட் வென்றதால் கௌரவத்துடன் வெளியில் சென்று இளம் வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற முடிவு எடுத்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த டி20 கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கம்பீர் வர உள்ள நிலையில் புதிய கேப்டன் குறித்து கம்பீர், அஜித் அகார்கர் முடிவெடுப்பார்கள் என தெரிகிறது. தற்போது இந்த பதவிக்கு முதல் நபராக பும்ராவின் பெயர் தான் பரிசீலிக்கப்படுகிறது.
பும்ரா ஏற்கனவே இந்திய அணியில் கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்டு உள்ள நிலையில் அவர் இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக இருக்கிறார். இதனால் அவரை கௌரவப்படுத்தும் விதமாக மூன்றாவது புதிய கேப்டன் பதவி கொடுக்க பிசிசிஐ ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்தப் பதவிக்கு ஹர்திக் பாண்டியா தான் வருவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்தியா வென்ற டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் துணை கேப்டனாக இருந்தார். மேலும் இந்தியாவின் வெற்றியில் பேட்டிங் பந்துவீச்சு என ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றினார்.
அது மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் கோப்பையை ஹர்திக் வென்ற நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருக்கிறார். இதனால் ஹர்திக் பாண்டியா விரைவில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த பொறுப்புக்கு ரிஷப் பண்ட் வரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
பண்ட், ஜெய்ஷா இடையே நல்ல நட்பு உள்ள நிலையில் டெல்லி கேப்டனாக ஐபிஎல் தொடரில் செயல்படுகிறார். இதனால் அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இந்த சூழலுக்கு இடையில் இந்திய அணி அடுத்த வாரம் ஜிம்பாப்வேவுக்கு சென்று ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கில் கேப்டனாக செயல்பட போகிறார் என்று அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.