மும்பை: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் செயல்பட்டு வரும் சூழலில், அவருக்கு புதிய பொறுப்புகள் தேடி வருவதாக தெரிகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஒவ்வொரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். அதேபோல் லக்னோ அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து ஜாகீர் கான் நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சந்திரகாண்ட் பண்டிட் ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வந்தது. கடந்த சீசனில் கேகேஆர் அணி மோசமான தோல்விகளை அடைந்ததால், அவரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதனிடையே கேகேஆர் அணியின் துணைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மீண்டும் கொண்டு வரப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுடன் அபிஷேக் நாயர் இணைந்து பணியாற்றி வந்தார். ரோகித் சர்மா 11 கிலோ எடையை குறைத்ததோடு, மீண்டும் ஃபார்முக்கு திரும்ப முக்கிய காரணமாக அபிஷேக் நாயர் அமைந்தார். ஏற்கனவே கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் அபிஷேக் நாயருடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட்டில் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ரகுவன்ஷி உள்ளிட்டோரை கண்டறிந்து பயிற்சி கொடுத்து வளர்த்தவர்களில் அபிஷேக் நாயர் முக்கியமானவர். இந்த நிலையில் கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு அபிஷேக் நாயர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாகவே அபிஷேக் நாயரின் பெயர் அடிபட்டது.
தற்போது கேகேஆர் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சீசனில் டுவைன் பிராவோ கேகேஆர் அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அபிஷேக் நாயர் கொண்டு வரப்பட்டுள்ளதால், கேகேஆர் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.