ஜெய்ப்பூர்: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான ரோஹித் சர்மா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்கவுள்ளார். விஜய் ஹசாரே ட்ராபியில் மும்பை அணிக்காக அவர் விளையாடவுள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அணியின் தொடர் போட்டி அட்டவணை காரணமாக முன்னணி வீரர்கள் பெரும்பாலும் உள்ளூர் போட்டிகளில் தலைகாட்டுவதில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் ஆடிய ரோஹித் சர்மா, தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை ஜெர்சியை அணியவுள்ளார். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.

2025-26 சீசனுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (டிசம்பர் 24) தொடங்குகிறது. இதில் மும்பை அணி தனது முதல் இரண்டு லீக் போட்டிகளில் ரோஹித் சர்மாவை களமிறக்குகிறது. ரோஹித் சர்மா ஆடும் அந்த இரண்டு போட்டிகள் -
டிசம்பர் 24 (நாளை): மும்பை vs சிக்கிம் (இடம்: சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்).
டிசம்பர் 26 (வெள்ளிக்கிழமை): மும்பை vs உத்தரகண்ட் (இடம்: சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்).
மும்பை அணிக்கு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா சாதாரண பேட்ஸ்மேனாக அணியில் இடம்பிடித்துள்ளார். இவர்களுடன் அஜிங்கியா ரஹானே, சர்பராஸ் கான், முஷீர் கான், அங்ரிஷ் ரகுவன்ஷி போன்ற நட்சத்திர பட்டாளமே அணியில் உள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் டிசம்பர் 29-க்கு பிறகும், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் அணியில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
அடுத்து ஜனவரி 2026-ல் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்காகவே ரோஹித் சர்மா விஜய் ஹசாரே ட்ராபியில் விளையாட முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் மற்றும் அரைசதம் விளாசி உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ரோஹித், உள்ளூர் போட்டிகளிலும் பெருமளவில் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கலாம்.