மும்பை: 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும்போது இந்திய வீரர்கள் அனைவரும் கோபத்தில் இருந்ததாகவும், அந்த அணியைப் பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்ததாகவும் ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் வென்றால் தான் ஆஸ்திரேலியா அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இருந்தது. அதே சமயம், இந்திய அணி 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகத் தோல்வி அடைந்த கோபத்துடன் இருந்தது.

அதன் காரணமாக, அந்த சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணியைத் தீவிரமாக வெளியேற்ற வேண்டும் என்ற வெறியுடன் இந்திய அணி ஆடி வெற்றியும் பெற்றது. அதனால் அந்தச் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணி வெளியேறியது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் இங்கிலாந்து அணியை இந்தியா எளிதாக வென்றது. பின்னர் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏன் கோபமடைந்தோம் என தற்போது ரோஹித் சர்மா பேசியிருக்கிறார். "நாங்கள் அப்போது கோபமாக இருந்தோம். எங்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்றால், ஆஸ்திரேலியர்கள் நவம்பர் 19 ஆம் நாளை (2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்த நாள்) நாசமாக்கி விட்டார்கள். எங்களது நாள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் நாளையும் நாசமாக்கி விட்டார்கள். அதற்கான பரிசை டி20 உலகக் கோப்பையில் அளிக்க வேண்டும் என நினைத்தோம்" என்று கூறி இருக்கிறார்.
இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து தொடரில் இருந்து வெளியேற்றிய போது உண்மையிலேயே இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்ததை மறுக்க முடியாது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையையும் வென்று ஒருநாள் போட்டி உலகக்கோப்பை ஏமாற்றத்துக்கு விடை கொடுத்தது.