பிட்ச் மண்ணை ரோகித் தின்றது ஏன்? டி20 உலககோப்பை கொண்டாட்டத்திற்கு பின் இப்படி ஒரு பின்னணி
பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற நிலையில் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு விதமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றது.
இதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்த ரோகித் வித்தியாசமாக ஆடுகளத்தில் இருந்த மண்ணை எடுத்து தின்றார். இந்த கொண்டாட்டத்திற்கான பின்னணி என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ஏற்கனவே கோப்பையை வாங்கும்போது ரோகித் சர்மா ஒரு விதமாக ஸ்லோ மோஷனில் நடந்து வந்து கோப்பையை வாங்கினார். அது கால்பந்து வீரர் மெஸ்ஸி உலக கோப்பையை வென்ற போது இப்படிதான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என்று ரசிகர்கள் கூறினர். இதேபோன்று பிரபல மல்யுத்த வீரர் இவ்வாறு தான் நடந்து வருவார் என்றும் ரசிகர்கள் கூறினர்.
ஆனால் ரோகித் சர்மா ஏன் இறுதிப் போட்டிக்கு பின் ஆடுகளத்தில் இருந்த புற்களை எடுத்து தின்றார் என்று பலருக்கும் தெரியவில்லை. அதற்கான பின்னணி என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரோகித் சர்மா, வெற்றியின் மிதப்பில் இருந்தபோது நான் நேரடியாக ஆடுகளத்திற்கு சென்றேன்.
ஏனென்றால் இந்த வெற்றியை இந்த ஆடுகளம் தான் எங்களுக்கு வழங்கியது. இந்த ஆடுகளத்தில் விளையாடி தான் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறோம். எனவே இந்த பார்படாஸ் மைதானத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன். இந்த ஆடுகளம் எனக்குள் இருக்க வேண்டும். என்னுள் கலக்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு செய்தேன்.
இந்த தருணங்கள் எல்லாம் மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னுடைய ஒட்டுமொத்த கனவும் பார்படாஸ் மண்ணில் தான் நிஜமாகி இருக்கிறது. இதனால் தான் அதனை நான் எடுத்து சாப்பிட்டேன் என்று ரோகித் சர்மா கூறினார்.இந்த கொண்டாட்டத்தை முதலில் தொடங்கியவர் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் தான். விம்பிள்டன் பட்டத்தை வென்ற போது அவர் ஆடுகளத்தில் இருந்த புல்லை எடுத்து தின்றார்.
இதனை தான் தற்போது ரோகித் சர்மா செய்திருக்கிறார். பொதுவாக விளையாட்டு வீரர்களை வரலாற்றில் மிகச் சிறந்தவர் என கோட் (GOAT -அதாவது Greatest of all time ) என்ற வார்த்தையை சொல்லி அழைப்பார்கள். ஆடு(Goat) போல் புற்களை வீரர்களும் சாப்பிடுவதால் தாங்கள்தான் அந்த கோட் (GOAT - Greatest of all time) என்பதை வீரர்கள் மறைமுகமாக இதன் மூலம் உணர்த்துகின்றனர்


Click it and Unblock the Notifications