மும்பை: அதிரடி தொடக்க ஆட்டக்காரராகவும், இந்திய அணியின் கேப்டனாகவும் வலம் வரும் ரோஹித் சர்மாவின் திறமையை, ஆரம்பத்தில் தான் அடையாளம் கண்டுகொள்ளத் தவறிவிட்டதாக அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இந்திய அணியில் பந்துவீச்சாளராக அறிமுகமாகி, பின்னர் தற்செயலாக பேட்ஸ்மேனாக மாறிய ரோஹித் சர்மாவின் சுவாரஸ்யமான தொடக்க காலக்கட்டத்தை பற்றி தினேஷ் லாட் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஒரு யூடியூப் பாட்காஸ்டில் பேசிய தினேஷ் லாட், 1999இல் சுமார் 12 வயது சிறுவனாக இருந்த ரோஹித் சர்மாவை முதன்முதலில் ஒரு ஆஃப்-ஸ்பின்னராகவே பார்த்ததாகக் கூறினார். தனது அணிக்கு எதிரான ஒரு போட்டியில் ரோஹித் பந்துவீசியதைப் பார்த்து ஈர்க்கப்பட்ட லாட், அவரை தனது பள்ளியில் சேர்க்குமாறு அவரது சித்தப்பாவிடம் கூறியுள்ளார். அதன்படி பள்ளியில் சேர்ந்த முதல் வருடத்தில், 14 வயதுக்குட்பட்ட அணியில் ரோஹித்திற்கு தொடர்ந்து பந்துவீச்சு பயிற்சியே அளிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் 8ஆம் வகுப்பு படிக்கும்போது, ஒருநாள் பள்ளியின் உள்ளே நுழையும்போது ஒரு சிறுவன் மிக நேர்த்தியாக பேட்டிங் பயிற்சி செய்வதை தினேஷ் லாட் கவனித்துள்ளார். பேட்டை மிகவும் நேராகவும், அழகாகவும் வருவதைக் கண்டு வியந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது அது ரோஹித் சர்மா என்பதை அறிந்து கொண்டார். 'நீ பேட்டிங் செய்வியா?' என்று கேட்டதற்கு, ரோஹித் 'ஆம் சார்' என்று பதிலளித்துள்ளார்.
"அதற்கு முன்பு வரை நான் அவருக்கு பேட்டிங் பயிற்சியே கொடுத்ததில்லை. அது என்னுடைய தவறு" என்று தினேஷ் லாட் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, வலைப்பயிற்சியில் ஆறு அல்லது ஏழாவது வீரராக ரோஹித் சர்மாவிற்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுத்துள்ளார்.
கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ரோஹித், ஒரு போட்டியில் ஏழாவது வீரராகக் களமிறங்கி போட்டிக்கு தேவையான முக்கியமான 40 ரன்களைக் குவித்தார். அவரது பேட்டிங் திறமையைக் கண்டு வியந்த பயிற்சியாளர் தினேஷ் லாட், அவரிடம் ஒரு சிறந்த பேட்டிங் திறமை இருப்பதை உணர்ந்தார்.
பின்னர், அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க முடிவு செய்து கேட்டபோது, ரோஹித் சர்மா மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து 140 ரன்கள் சேர்த்து அசத்தினார் ரோஹித் சர்மா. அன்றிலிருந்து, அவர் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை தினேஷ் லாட் உறுதி செய்தார்.
ஆரம்பத்தில் ஒரு ஆஃப் - ஸ்பின்னராக அடையாளம் காணப்பட்ட ரோஹித் சர்மா, இன்று உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக மாறியுள்ளார். பின்னர் இந்திய அணியிலும் ஒரு ஆல் ரவுண்டராக அறிமுகமான ரோஹித் சர்மா நீண்ட காலம் ஆறாம் வரிசை வீரராக மட்டுமே பேட்டிங் செய்தார். பின்னர் அப்போதைய கேப்டன் தோனி துவக்க வீரராக வாய்ப்பு அளித்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனைக்கு காரணமாக அமைந்தார்.