
முதல் டெஸ்ட் போட்டி
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை தகர்த்தெறிந்தவர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் தான். முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 5 விக்கெட்கள் மற்றும் 2வது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்கள் என போட்டிப் போட்டுக்கொண்டு விக்கெட்களை அள்ளினர். இந்நிலையில் இவர்களின் சண்டை குறித்து கேப்டன் ரோகித் சர்மா சுவாரஸ்ய தகவல்களை கொடுத்துள்ளார்.

ரோகித்தின் நேர்காணல்
போட்டி முடிந்த பிறகு இர்ஃபான் பதான் மற்றும் தீப் தசகுப்தா ஆகியோருடன் ரோகித் நேர்க்காணலில் பங்கேற்றார். அதில், எங்களுக்கு ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்ஷர் போன்ற வீரர்கள் கிடைத்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். ஆனால் அவர்களுக்குள் நடக்கும் சாதனை போட்டிக்கு இடையே நான் மாட்டிக்கொண்டேன். மாறி மாறி என்னிடம் வந்து பந்தை கேட்டு வருகின்றனர்.

ஜடேஜா - அஸ்வின் சண்டை
ஒருபுறம் ஜடேஜா 249 விக்கெட்கள் எடுத்திருந்த போது 250வது விக்கெட்டை எடுக்க பந்தை கொடுக்குமாறு கேட்கிறார். மற்றொருபுறம் அஸ்வின் 4 விக்கெட்களை எடுத்துவிட்டேன், பந்தை கொடுத்தால் ஃபைபர் எடுத்துவிடுவேன் என வந்து நிற்கிறார். இதுபோன்ற சவால்களை தான் நான் எப்போது எதிர்கொள்கிறேன். போட்டிக்கு வரும்போதே மைல்கல்லுக்கு தயாராகி வந்துவிடுகின்றனர் என சிரித்துக்கொண்டே கூறினார்.

சிராஜ் ஆசை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் ஏதேனும் சாதனையை படைத்துவிடுகின்றனர். சமீபத்தில் நடந்த இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கெட்டில் கூட முகமது சிராஜ் 10 ஓவர்களையும் போட்டே தீர வேண்டும் எனக்கேட்டார். ஏனென்று கேட்டதற்கு தனது ஃபைபரை முடித்தாக வேண்டும் எனக்கூறினார். இதற்கெல்லாம் நான் என்ன தான் செய்வது என நகைச்சுவையாக கூறினார்.


Click it and Unblock the Notifications