மும்பை:கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அதை தமது மகளுக்கு அர்ப்பணிக்கும் விதமாக பேட்டை தோளில் போட்டு கொண்டு தாலாட்டினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, ரோகித் சர்மா 48 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார்.
ரோகித் சர்மா, அரைசதம் அடித்ததும் தனது பேட்டை தோளில் போட்டு தலாட்டுவது போல் காட்டினார். அரைசதத்தை தனது செல்ல மகள் சமைராவுக்கு சமர்ப்பிக்கும் வகையில் பேட்டை தோளில் போட்டு தாலாட்டியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் மும்பை அணி 18 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. தோல்வி அடைந்த கொல்கத்தா அணி தொடரில் இருந்து வெளியேறியது.