உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 200 ரன்கள் துரத்தும்போது இரண்டு ரன்களை எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த போட்டியில் இந்திய அணி தோற்றுவிடும் என பலரும் டிவியை ஆப் செய்து விட்டு சென்ற நிலையில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் அபாரமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இன்றைய ஆட்டத்தில் நாங்கள் கடைசியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பந்துவீச்சு மற்றும் பில்டிங்கில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தியை அளிக்கிறது. குறிப்பாக பில்டிங்கில் நாங்கள் இன்று சிறப்பாக செயல்பட்டோம். அதற்கு காரணம் நாங்கள் கடுமையான பயிற்சியை எடுத்துக் கொண்டோம். இதுபோன்ற கடினமான சூழலில் இப்படி செயல்பட்டது சிறந்த செயல்பாட்டாக நான் கருதுகிறேன்.
இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் வேகப்பந்து வீச்சு சுழற் பந்து வீச்சு என அனைவருக்குமே ஏதேனும் சாதகமாக செயல்பட்டது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து ரிவர்ஸ் லிங்க் ஆனது. மேலும் சுழற் பங்குவீச்சாளர்களும் விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது. இரண்டு ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த போது நிச்சயமாக நான் பயந்தேன்.
ஏனெனில் 200 ரன்கள் என்ற இலக்கை தொடும் போது இப்படி ஒரு தொடக்கத்தை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதற்கு ஆஸ்திரேலிய அணி தான் பாராட்ட வேண்டும். அவர்கள் நல்ல நெருக்கடியை எங்களுக்கு கொடுத்தார்கள். அது மட்டுமில்லாமல் நாங்களும் தேவையில்லாத ஷாட்டுகளை ஆடி தான் விக்கெட்டுகளை இழந்தோம்.

குறிப்பாக பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் விக்கெட்டுகள் விழுந்துவிட்டது. எனினும் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுக்கள். அவர்கள் இருவரும் இணைந்து போட்டியை வெல்லக்கூடிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். இந்த தொடரிலே எங்களுக்கு மிகவும் சவாலானது இதுபோன்ற பல விதமான ஆடுகளங்களில் நாங்கள் விளையாட போகிறோம்.
அதற்கு தகுந்தார் போல் எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக ஒரு அணியாக நாங்கள் தயாராகி வருகிறோம். சென்னை மக்கள் எப்போதுமே ஏமாற்றத்தை தர மாட்டார்கள். ஆட்டம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்களுக்காக வந்து ஆரவாரம் செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ரோகித் சர்மா கூறினார்.