
ஆசிய கோப்பை சர்ச்சை
2023ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் தான் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா அங்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய் ஷா, இந்திய அணி அங்கு பயணம் செல்ல விருப்பமில்லை என்றும், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து வேறு ஏதேனும் ஒரு நாட்டிற்கு மாற்றவுள்ளதாகவும் அறிவித்தார்.

பாக். அதிரடி அறிக்கை
இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் வாரியம் அதிரடி அறிக்கையை வெளியிட்டது. அதாவது பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என்றால், 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்லாது எனக்கூறியது. மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலகவும் தயார் என்பது போல முடிவெடுத்திருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரோகித் விளக்கம்
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், " என்னுடைய முழு கவனமும், அக்கறையும் தற்போது உலகக்கோப்பையின் மீது மட்டுமே உள்ளது. ஏனென்றால் இதுதான் தற்போது எனக்கு முக்கியம். பின்னால் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி எனக்கு கவலையில்லை. எனவே அதனை நினைத்து கவலைப்படுவது பயனில்லாத ஒன்றாகும்.

பிசிசிஐ-ன் முடிவு
பாகிஸ்தானுக்கு செல்லலாமா? செல்லக்கூடாதா? என்பதை பிசிசிஐ முடிவெடுக்கும். பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்வதை விட, நாளை பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். எனவே அதனை பற்றி மட்டும் இனி யோசிப்போம் என ரோகித் சர்மா தடாலடியாக கூறினார்.


Click it and Unblock the Notifications