கவுஹாத்தி : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் பேசிய பேச்சால் ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் இடையே அதிருப்தி எழுந்துள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா தனது முதல் பயிற்சிப் போட்டியில் பலமான அணிகளில் ஒன்றான இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

இந்தப் போட்டி கவுஹாத்தியில் துவங்கியது. முதலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லரும் டாஸ் போட வந்தனர். இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன் பின் தன் டாஸ் முடிவு மற்றும் இந்தியாவின் திட்டம் குறித்து ரோஹித் சர்மா பேசிய போது "பந்துவீச்சாளர்கள் வெயிலில் வாடக் கூடாது என்பதால் மட்டுமே தான் பேட்டிங் தேர்வு செய்தேன்" எனக் கூறினார். இதுவே கொஞ்சம் விசித்திரமான பதிலாக இருந்தது. அடுத்து சொன்னது அதை விட பயங்கரமாக இருந்தது.
"பயிற்சிப் போட்டி என்பது எங்களுக்கு ஒரு சம்பிரதாயம் தான். நாங்கள் ஏற்கனவே 7 - 8 போட்டிகளை தீவிரமான சூழல்களில் ஆடி விட்டோம்" எனக் கூறினார். இதைக் கேட்கும் போதே இந்திய அணிக்கு தன்னம்பிக்கை அளவுக்கு மீறி இருக்கிறதோ என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
பயிற்சிப் போட்டியை ஒரு உலகக்கோப்பை போட்டி போலவே எடுத்துக் கொண்டு அதில் வெற்றி பெற போராடக் கூடாதா? பயிற்சிப் போட்டி என்பதே அணியின் திட்டங்களை செயல்படுத்திப் பார்க்க ஒரு வாய்ப்பு. ஆனால், ரோஹித் சர்மா 7 - 8 போட்டிகளில் ஆடி விட்டோம் என சொல்வதை வைத்து பார்க்கும் போது இந்திய அணி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஆடியதே போதும் என்ற முடிவுக்கு வந்து இருப்பது அதிருப்தியை அளிக்கிறது
ஆசிய கோப்பையில் கூட இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் முழு தீவிரத்தையும் வெளிப்படுத்தியது. ஆனால், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை ரோஹித் சொன்னது தற்போது சொன்னது போல ஒரு சம்பிரதாய தொடராகத்தான் இந்தியா அணுகியது.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் என முக்கிய வீரர்கள் யாருமே இல்லை. மூன்றாவது போட்டியில் பாண்டியா, ஷமி, கில் மட்டுமே இல்லை. ஆனால், இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியின் முடிவில் இந்தியாவின் சேஸிங் திறன் குறித்து சந்தேகம் எழுந்தது.
அதன்படி பார்த்தால் இங்கிலாந்து பயிற்சிப் போட்டியில் ரோஹித் சர்மா டாஸ் வென்ற பின் பந்துவீச்சை தேர்வு செய்து சேஸிங் திறனை சோதிக்க முயற்சி செய்து இருக்க வேண்டும். ஆனால், பந்துவீச்சாளர்களை குழந்தைகளை போல "பொத்தி பாதுகாக்கும்" வகையில் பேட்டிங் தேர்வு செய்தேன் எனக் கூறுவதை ஏற்க முடியவில்லை.
வீரர்களுக்கு காயம் ஏற்படும் என்ற ஒரு வாதத்தை வைத்து ரோஹித் சர்மா இந்த விஷயத்தில் தப்பி விடுவார். ஆனால், பயிற்சிப் போட்டியை சம்பிரதாயப் போட்டி என அவர் கூறுவது இன்னும் மோசமானது. இதை விளக்க வேண்டும் என்றால் இதே டாஸ் நிகழ்வுக்கு பின் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் என்ன கூறினார் என்று பார்த்தாலே போதும்.
ஜோஸ் பட்லர் டாஸின் போது, "இந்த பயிற்சிப் போட்டியில் இடம்பெறும் அனைத்துமே எங்களின் முதல் உலகக்கோப்பை போட்டிக்கான தயாரிப்பு தான்" என்றார். அதாவது முதல் உலகக்கோப்பை போட்டியை சாதாரணமாக அணுகினால் ஒரு போட்டியில் தோல்வி ஏற்பட்டு உலகக்கோப்பை லீக் சுற்றில் புள்ளிகளை பெற முடியாமல் போகும் என்ற உண்மையை உணர்ந்து இருக்கிறது இங்கிலாந்து அணி. அதற்காக பயிற்சிப் போட்டியில் இருந்தே நாங்கள் தயாராகிறோம் என்கிறார் இங்கிலாந்து அணி கேப்டன். ஆனால், ரோஹித் சர்மா அதற்கு நேர்மாறாக சொல்லி இருக்கிறார்.
38 மணி நேரம் விமான பயணம் செய்து நேற்று மதியம் தான் இந்தியா வந்தாலும், அடுத்த 20 மணி நேரத்தில் பயிற்சிப் போட்டிக்கு தயாராகி இருக்கும் இங்கிலாந்து அணி, அதையும் முக்கியமான ஒன்றாகவே கருத்தில் கொண்டுள்ளது. ஆனால், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு எல்லாமே சம்பிரதாயம் தான் போல.