மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிவடைந்தவுடன், நவம்பர் 30 முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது.
அந்தத் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய அணி வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கு முன் நடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின்போது ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சுப்மன் கில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இனி சுப்மன் கில் இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர கேப்டனாக இருப்பார் எனக் கூறப்பட்டது. ரோஹித் சர்மா இந்திய அணியில் ஒரு வீரராக மட்டுமே இனி விளையாட முடியும் என்ற நிலையும் ஏற்பட்டது. மேலும், இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டு இருந்தார். ஒருவேளை சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டால் ஸ்ரேயாஸ் ஐயரே இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.
இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவில் ஃபீல்டிங் செய்தபோது ஏற்பட்ட உள்காயத்தால் மிகவும் அபாயமான கட்டத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார். அவர் இன்னும் பயிற்சி செய்யவே தொடங்கவில்லை. அவருக்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஓய்வு அளிக்கப்படும். அதுவரை அவர் எந்தக் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய இந்திய அணியில் ஏற்கனவே இந்திய ஒருநாள் அணிக்குக் கேப்டனாக இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோரையும் கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி புதிய கேப்டனான சுப்மன் கில்லை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் புதிதாக ஒருவரை கேப்டனாக அறிவிக்க வேண்டாம் என்ற மனநிலையில் பிசிசிஐ (BCCI) இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அல்லது ரிஷப் பண்ட்டை கேப்டனாக நியமித்து, அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், அதன் பின்னர் சுப்மன் கில்லுடன் ஒப்பீடுகள் எழும். அதனால் சமூக வலைதளங்களில் பிசிசிஐக்கு அழுத்தம் அதிகரிக்கும்.
இந்தச் சங்கடமான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மாவிடமே கேப்டன் பதவியை அளிக்கலாம் என இந்தியத் தேர்வுக்குழுவினர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கு மட்டுமான ஒரு ஏற்பாடாகவே இருக்கும். சுப்மன் கில் எப்போது அணிக்குத் திரும்புகிறாரோ, அப்போது அவரே மீண்டும் ஒருநாள் அணியின் கேப்டனாக இருப்பார்.