மும்பை : ஒரு போட்டியில் தோல்வியை தழுவியதால் ரோகித் சர்மா மோசமான கேப்டனாக மாறிவிட மாட்டார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேப்டன்சி என்று வந்தால் ரோஹித் சர்மா அதில் சிறப்பான பணியை செய்திருக்கிறார் என்று பாராட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர் ஐந்து ஐபிஎல் கோப்பையை வெல்வது என்பதெல்லாம் சுலபமான காரியம் கிடையாது. நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.

இறுதிப் போட்டியில் எந்த முடிவு வந்திருந்தாலும் இந்தியா ஒரு சாம்பியன் அணியாக தான் திகழ்ந்தது. ஒரே ஒரு மோசமான போட்டியால் ரோகித் சர்மாவும் இந்திய அணியையும் தூக்கி போட்டு விட முடியாது. 10 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அசத்திய அணியை ஒரு போட்டியை வைத்து மதிப்பிடுவது மிகவும் தவறு. ரோகித் சர்மா மட்டும் நல்ல பார்மில் இருந்தால் நிச்சயமாக அவர்தான் வரும் டி20 உலக கோப்பையிலும் கேப்டனாக இருக்க வேண்டும்.
அவர் பார்மில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அவர்தான் கேப்டனாக இருக்க வேண்டும். டி 20யை பொருத்தவரை கேப்டன்சி என்பது ஒரு பெரிய பொறுப்பு. கேப்டனுக்கு முதலில் அணியில் நிரந்தரமான இடம் இருக்க வேண்டும். டி20 போட்டியை பொறுத்தவரை வயது என்பது ஒரு தகுதியாக நாம் பார்க்க கூடாது.
வயதை வைத்து ஒரு வீரரை நாம் நீக்கவும் கூடாது, தேர்வு செய்யவும் கூடாது. அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது என்பது தனிப்பட்ட வீரர்களின் முடிவு எந்த வீரரையும் ஓய்வு பெற்றுவிடு என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது. அதே மாதிரி ஒரு வீரரை தேர்வு செய்வது என்பது முற்றிலும் தேர்வு குழுவினர் கையில் தான் இருக்கிறது.
யார் நினைத்தாலும் எந்த ஒரு வீரரிடமிருந்து பேட்டையும் பந்தையும் பிடுங்கி வைத்துக் கொள்ள முடியாது. அனைத்தையும் பார்ம் தான் தீர்மானிக்கும் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். நடந்து முடிந்த உலக கோப்பையில் ரோகித் சர்மா 11 இன்னிங்ஸில் விளையாடி 597 ரன்கள் சேர்த்து அந்த தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்று பெருமையை பெற்றார்.