மும்பை : இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா எதிர்காலம் குறித்து பல விவாதங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், ரோஹித் சர்மாவால் அடுத்த 2024 டி20 உலகக்கோப்பை ஆட முடியுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது ரோஹித் சர்மாவின் முக்கிய பலவீனம் ஒன்றை சுட்டிக் காட்டி அவருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
தற்போது இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்களில் வயதான வீரர்கள் என்றால் அது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தான். ரோஹித் சர்மாவுக்கு தற்போது 36 வயது ஆகிறது. விராட் கோலிக்கு 34 வயது ஆகிறது. அவர்கள் இருவரும் 2027இல் நடைபெற இருக்கும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பது என்பது சந்தேகம் தான்.

ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அவர்கள் இருவரால் பங்கேற்க முடியும். ஆனாலும், இப்போதே அவர்கள் வயதை காரணம் காட்டி அவர்களை டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட வைக்கக் கூடாது என விமர்சனம் எழுந்து வருகிறது.
அது குறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனிடம் கேட்ட போது ரோஹித் சர்மாவின் பேட்டிங் நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பை தொடரில் அபாரமாக இருந்தது. இந்திய அணிக்கு தொடர்ந்து அதிரடி துவக்கம் அளித்தார். அவரிடம் டி20 போட்டிகளுக்கு தேவையான அளவுக்கு 130 ஸ்ட்ரைக் ரேட் உள்ளது. ஆனால், அவர் தன் உடற்தகுதியை மட்டும் சரி செய்து கொள்ள வேண்டும். விராட் கோலி போன்ற உடற்தகுதி இருந்தால் அவரால் 2024 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியும் எனக் கூறி இருக்கிறார்.
ரோஹித் சர்மா நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களுக்கும் மேல் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 130 என்ற அளவில் இருந்தது. இப்படி பேட்டிங் நன்றாக இருந்தாலும் அவர் உடற்தகுதியில் பின்தங்கி இருப்பதை சுட்டிக் காட்டி எச்சரித்து இருக்கிறார் முத்தையா முரளிதரன்.
ரோஹித் சர்மாவுக்கு உடற்தகுதி இல்லை என சிலர் அவ்வப்போது விமர்சனம் செய்தாலும் ரன் குவிக்க அதெல்லாம் ஒரு தேவையே இல்லை என நிரூபித்து வருகிறார் ரோஹித் சர்மா. மேலும், பீல்டிங்கிலும் தவறு சொல்ல முடியாத அளவுக்கு செயல்படுகிறார். எனினும், டி20 உலகக்கோப்பையில் இளம் வீரர்களுடன் அவர் போட்டி போட வேண்டும் என்ற நிலையில் முத்தையா முரளிதரன் ரோஹித் சர்மாவை எச்சரித்து இருக்கிறார்.