ரோகித் சர்மாவை ஓய்வு பெற வற்புறுத்துவதா? ஏற்று கொள்ள முடியாது.. மும்பை இந்தியன்ஸ் வீரர் சாடல்
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா 47 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுபுறம் விராட் கோலி 66 பந்துகளை எதிர் கொண்டு 65 ரன்கள் சேர்த்தார். இந்த சூழலில் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ந்து தடுமாறி வருவதால், அவரை அணியிலிருந்து நீக்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் ரோகித் சர்மாவை ஓய்வு பெற கம்பீர் அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி கிரிக்கெட் வீரர் திருமலைசெட்டி சுமன், இது மிகவும் அநியாயமான ஒன்று என்று சாடி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், உலகக் கோப்பை அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. அங்கு ஆடுகளம் நல்ல பவுன்ஸ் தரும். இதுபோன்ற சூழ்நிலையில் விளையாட அனுபவம் மிகவும் முக்கியம். இது போன்ற ஆடுகளத்தில் விளையாடுவதற்கு ஏற்ற பேட்டிங் ஸ்டைல் ரோகித் சர்மாவிடம் இருக்கின்றது.
இரண்டு மோசமான ஆட்டங்களுக்கு பிறகு ரோகித் சர்மாவை நீங்கள் வற்புறுத்தி ஓய்வு பெற வைத்தீர்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அது இதயத்தை உடைப்பதற்கு சமம். என்னால் முடியவில்லை, என்னுடைய உடல் ஒத்துழைக்க மறுக்கிறது என்று ரோகித் சர்மாவே கூறி ஓய்வு பெற்றால் அது வேறு விஷயம். ஆனால் அவர் முயற்சி செய்தும், நீங்கள் வற்புறுத்தி ஓய்வு பெற்று விடுங்கள் என்று சொல்வதை யாராலும் ஏற்றுக் கொடுக்க முடியாது.
அதுவும் ரோகித் சர்மா பல சாதனைகளை இந்திய அணிக்காக செய்தவர். இது சரியான விஷயம் கிடையாது. எனக்குப் பிடிக்கவும் இல்லை, நான் இது வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு இங்கிலாந்து வீரர்கள் ஷாட் பந்துகளை அதிகம் பயன்படுத்தினார்கள்.
ஆடுகளமும் தொய்வாக இருந்ததால் பந்து மெதுவாக வந்தது. இதனால் ரோகித் சர்மா ஸ்வீப் ஷாட் ஆட முயற்சி செய்தார். அது தவறாக முடிந்தது. இஷான் கிஷனும் அப்படி தான் புல் செய்து ஆட்டம் இழந்தார். ஆடுகளத்தில் பவுன்ஸ் வித்தியாசமாக இருந்தது.
இது எந்த வீரர்களுக்குமே ஈசியான ஒரு விஷயம் கிடையாது. விராட் கோலி எப்போதும் போல் நன்றாக விளையாடினார். ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் நல்ல தொடக்கத்தை பெற்றார். கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டார். புது பந்தை இங்கிலாந்தில் எதிர்கொண்டு விளையாடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வரை குறைவாக அடித்திருக்கிறது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் பேட்டர்களுக்கு சோதனையாக அமைந்துவிட்டது என்று சுமன் கூறியுள்ளார்


Click it and Unblock the Notifications

