லண்டன்: இந்திய வீரர் விராட் கோலியின் கேப்டன்சி திறனை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் மூன்று வகையான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக செயல்பட்ட போது, ஐசிசி தொடர்களில் மட்டுமே மோசமாக சொதப்பி வந்தார். இதனால் பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கும், இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலிக்கும் மோதல் முற்றியது. இதனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து கேப்டன்சி பதவியை விராட் கோலி ராஜினாமா செய்தார். ஆனால் டெஸ்ட் கேப்டன்சியை தொடர்ந்து வந்தார்.

ஆனால் தென்னாப்பிரிக்கா தொடருக்கு பின் டெஸ்ட் கேப்டன் பதவியையும் விராட் கோலி ராஜினாமா செய்தார். இதற்கு பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலியே மறைமுக காரணமாக அமைந்தார். இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இருந்து கங்குலியை பின் தொடர்வதை விராட் கோலி நிறுத்திக் கொண்டார். இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. ஐபிஎல் தொடரின் போதும் கங்குலிக்கு கை கொடுக்காமல் விராட் கோலி விலகி சென்றார். இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. பின்னர் இருவரும் சமாதானமாகினர்.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போது விராட் கோலி கேப்டன்சியை இந்திய முன்னாள் வீரர் கங்குலி பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து கங்குலி பேசுகையில், விராட் கோலி கேப்டனாக இருந்த போது எப்படி பவுலர்களை பயன்படுத்தினாரோ, அதுபோல் ரோகித் சர்மாவும் பயன்படுத்த வேண்டும் என்று பாராட்டியுள்ளார்.
அதேபோல், விராட் கோலி பேட்டிங் பற்றி கங்குலி பேசுகையில், விராட் கோலி டெஸ்ட் பேட்டிங் சாதனைகள் அபாரமானது. அதேபோல் ஒருநாள் போட்டி வரலாற்றில் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன். எப்போதெல்லாம் பிரஷர் அதிகமிருக்கிறதோ, அப்பொது சிறப்பாக செயல்படக் கூடியவர் விராட் கோலி என்று தெரிவித்துள்ளார்.