மும்பை: ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் ஒரே ஒரு ரஞ்சி டிராபி போட்டியில் மட்டும் ஆடிய நிலையில் அடுத்த சுற்று போட்டியில் அவர்கள் மூவரின் பெயரும் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி வீரர்கள் அனைவரும் இனி உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து இருந்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் பலரும் தற்போது நடைபெற்று வரும் 2024 - 25 ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினர். அடுத்து சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் அதிக ரன் குவிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ரோஹித் சர்மா 3 மற்றும் 28 ரன்களையும், ஜெய்ஸ்வால் 4 மற்றும் 24 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 11 மற்றும் 17 ரன்களையும் மட்டுமே எடுத்தனர். மூவரும் பெரும் ஏமாற்றம் அளித்த நிலையில் மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகி இருந்தது. அதற்கேற்ப அந்த போட்டிக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்ட போது அவர்கள் மூவரின் பெயரும் இடம் பெறவில்லை.
மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி காயம் காரணமாக முதல் சுற்று ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடவில்லை. அதே சமயம் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் போன்ற இந்திய அணி வீரர்கள் முதல் சுற்று போட்டியில் விளையாடினர். அவர்களில் கில் மட்டுமே சதம் அடித்து நம்பிக்கை அளித்து இருந்தார்.
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் மும்பை அணியில் ஏன் இடம் பெறவில்லை? பிசிசிஐ அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என கூறிய நிலையில் அவர்கள் ஏன் இரண்டாவது சுற்று போட்டியில் விளையாடவில்லை என்பது குறித்து விசாரித்த போது அவர்கள் மூவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெற்று இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்று தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அந்த ஒருநாள் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளனர்.
எனவே, இங்கிலாந்து தொடருக்கு முன் நடைபெறும் பயிற்சி முகாம் முக்கியமானது என்பதால் அவர்கள் மூவரும் அந்த பயிற்சி முகாமில் பங்கேற்க செல்வதாக கூறப்படுகிறது. விராட் கோலி முதல் சுற்று ரஞ்சி போட்டியில் விளையாடாத காரணத்தால் இரண்டாவது சுற்று போட்டியில் விளையாடுகிறார். அவர் சற்று தாமதமாக ஒருநாள் போட்டி தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பார்.