குருகிராம்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, 2023 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு முழுமையாக ஓய்வு பெற நினைத்ததாகத் தெரிவித்துள்ளார். "என்னால் இனிமேல் எதுவும் கொடுக்க முடியாது" என்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். எனினும், மனப்போராட்டத்தை வென்று, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளுக்கு இந்தியாவை வழிநடத்தினார்.
உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றதன் மூலம், , முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன் பட்டம் வெல்லும் கனவை இழந்தார். இந்தத் தோல்வி "உடலில் இருந்து அனைத்தையும் உறிஞ்சிவிட்டது" எனக் குறிப்பிட்ட அவர், பல வாரங்கள் பொதுவெளியில் இருந்து விலகியிருந்தார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் இருண்ட காலகட்டமாக அமைந்தது.

குருகிராமில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோஹித் மாணவர்களிடம் உரையாற்றினார். அதில், "தோல்வியைத் தாங்குவது கடினம், ஆனால் இதோடு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. இது ஒரு பாடம்; 'இதை எப்படி விட்டுவிட்டு புதியதைத் தொடங்குவது' என்று சிந்தித்தேன். டி20 உலகக் கோப்பை 2024 வருகிறது; அதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதை இப்போது சொல்வது எளிது, ஆனால் அப்போது மிகவும் கடினமாக இருந்தது."
"இந்த விளையாட்டை இனி நான் ஆட விரும்பவில்லை என்று நினைத்தேன்; ஏனெனில் இது என் உடலிலுள்ள அனைத்தையும் உறிஞ்சிவிட்டது, என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. நான் விரும்பி, கனவு கண்ட ஒன்றான இதை அவ்வளவு எளிதாக விடமுடியாது. மீண்டு வர நிறைய நேரமும், சக்தியும் தேவைப்பட்டது," என்றும் அவர் விளக்கினார்.
தற்போது, ரோஹித் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், 50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுகிறார். 2027 உலகக் கோப்பையில் இறுதி ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது இலக்காக உள்ளது.2011ஆம் ஆண்டு இந்திய அணி உலககோப்பையை வென்ற போது ரோகித் சர்மாவுக்கு அணியில் வாய்ப்பில்லை என்றாலும், 2007 மற்றும் 2024 ஆகிய டி20 உலககோப்பையையும், 2013 மற்றும் 2025 சாம்பியன்ஸ் கோப்பையையும் ரோகித் சர்மா வென்றுள்ளார்.