நான் விளையாடும் போது இப்படி இல்லை.. இந்திய கிரிக்கெட் சரியான திசையில் செல்கிறது.. ரோகித் பாராட்டு
இந்திய கிரிக்கெட் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணியின் செயல்பாடுகள் மற்றும் வீரர்களின் மனநிலை என இரு தளங்களிலும் இந்த முன்னேற்றம் தென்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்திய அணி உலக கிரிக்கெட்டில் ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே தனது பிரதான நோக்கம் என்றும், அதற்கு அது ஏற்கெனவே "சரியான இடத்தில்" இருப்பதாக நம்புவதாகவும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.
மும்பை இந்தியன்ஸ் நடத்திய ESA தின நிகழ்வில் பேசிய ரோகித், "இந்தியா உலக கிரிக்கெட்டின் மாபெரும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. இந்தியாவின் கடந்த மூன்று ஆண்டு கால பங்களிப்புகள் அசாத்தியமானவை. 2024 உலகக் கோப்பை, மகளிர் உலகக் கோப்பை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மற்றொரு டி20 உலகக் கோப்பை என பல்வேறு தொடர்களில் அணி சிறப்பாக விளையாடியுள்ளது.

எங்களின் வெற்றிக்கான பயணத்தைத் தொடர்வோம் என நம்புகிறேன்," என்று உற்சாகத்துடன் கூறினார். இந்தியாவின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும், வயதுப் பிரிவுகளிலும் கிடைத்த வெற்றிகள், நாட்டின் துடிப்பான கிரிக்கெட் கட்டமைப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.
தனது அறிமுகக் காலத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்களையும் ரோகித் சர்மா விளக்கினார். "நாங்கள் விளையாடத் தொடங்கிய காலகட்டத்தில், 130-140 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோராகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அது சவாலானது. இப்போது எந்த ஒரு ரன் இலக்கும் போதுமானதாக இல்லை. இது காலப்போக்கில் இந்த விளையாட்டு எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
"வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும், திறந்த மனதுடனும் செயல்படுகிறார்கள். இது விளையாட்டு மற்றும் லீக் போட்டிகளுக்கு ஒரு நல்ல அறிகுறி. அவர்கள் பழைய பழைமைவாத நுட்பங்களுக்குள் முடங்காமல், ஒரு படி மேலே சென்று சவால்களை எதிர்கொள்ளத் தயங்குவதில்லை. எதிர்வரும் ஆண்டுகளிலும் இதேபோன்ற அணுகுமுறை தொடரும், இது விளையாட்டை இன்னும் பெரிய தளத்திற்குக் கொண்டு செல்லும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"ஆறு வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர் என்பதை நான் அறிவேன். அவர்களின் வாழ்க்கையின் இவ்வளவு ஆரம்ப காலகட்டத்தில் அதிக அழுத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் விளையாட்டை ரசிக்க வேண்டும், நண்பர்களுடன் பார்க்கவும் விளையாடவும் வேண்டும். இதுதான் எனக்கும் தொடங்கியது. சூழ்நிலையின் தேவையை உணர்ந்து விளையாட்டை அனுபவிப்பதே முக்கியம். எதையும் செய்யும்படி ஒருவர் உங்களை வற்புறுத்த முடியாது" என்று அவர் குறிப்பிட்டார்.
"நான் அறிமுகமானதில் இருந்து இன்றுவரை, கற்றுக்கொள்ள நிறைய சூழ்நிலைகள் இருந்தன. இதிலிருந்து நான் எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான பல வழிமுறைகளை உணர்ந்தேன். விளையாட்டில் எப்போதுமெ ஒரு சீரான பயணம் கிடையாது. சிகரங்கள் மட்டுமல்ல, சரிவுகளும் நிறைய கற்க உதவுகின்றன" என்று அவர் விளக்கினார்.
"இந்திய மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, அணியின் இலக்கே மிக முக்கியம் என்பதை உறுதிப்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்துகொண்டேன்."
"ஒருவர் கேப்டனாக இருக்கும்போது அது வேறு கதை. ஏனெனில் நீங்கள் உங்கள் செயல்திறனைப் பற்றி மட்டும் கவலைப்பட தேவையில்லை. மற்ற வீரர்களின் செயல்திறனையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சதம் அடித்திருந்தாலும், மற்றவர்கள் சரியாக விளையாட முடியாமல் அணி ஆட்டத்தை இழந்தால் அது கவலையளிக்கும். முடிவுகள் சாதகமாக வரும் வரை உங்களுக்கு நிம்மதி கிடைக்காது" என்று ரோகித் சர்மா விளக்கினார்.


Click it and Unblock the Notifications

