எனக்கா காயம்? பயிற்சியில் இறங்கிய 'ஹிட்மேன்'.. ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கு தீவிரம்
மொகாலி: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. இதற்காக மொகாலியில் உள்ள ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உடற்தகுதி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா முழு வீச்சில் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற பல முன்னணி வீரர்கள் இருந்தபோதும், அனைவரது பார்வையும் ரோஹித் சர்மா மீதே இருந்தது. குர்னூர் பிரார், பிரின்ஸ் யாதவ், ஹர்ஷ் துபே போன்ற இளம் வீரர்கள் தங்களது பயிற்சிகளை அமைதியாக மேற்கொண்டு வந்தனர்.

பயிற்சியின் துவக்கத்தில் உடற்பயிற்சி நிபுணர் அட்ரியன் லீ ரூக்ஸ் மேற்பார்வையில் ரோஹித் சர்மா தனது உடற்பயிற்சிகளை துவங்கினார். சக வீரர் இஷான் கிஷன் உடன் இணைந்து அவர் 5 முறை சிறிய அளவிலான ஓட்டப் பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது அவருக்கு எந்த ஒரு உடல் சோர்வும் ஏற்படவில்லை என்பதை வெளிப்படையாகவே காண முடிந்தது.
இதன்பின் முழு பேட்டிங் கவசங்களுடன் வலைப்பயிற்சிக்கு வந்த அவரை, அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் உன்னிப்பாக கவனித்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வந்ததால் ஆரம்பத்தில் சற்று தடுமாறிய அவர், பவுண்டரிகளை விளாசுவதை விட பந்துகளை கணித்து ஆடவே முயற்சித்தார். இளம் வேகப்பந்து வீச்சாளர் நிதிஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சில் ஆரம்பத்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே அவரது இயல்பான ஆட்டம் திரும்பியது. பந்துகளை வலுக்கட்டாயமாக அடிக்காமல், பேட்டிங் லயத்திற்கு ஏற்ப நிதானமாக விளையாடினார். அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை தனது வழக்கமான பாணியில் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டார். பிரின்ஸ் யாதவ் வீசிய சிறப்பான யார்க்கர் பந்தையும் லாவகமாக விரட்டினார். குர்னூர் பிரார் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் புல் ஷாட் அடிக்க முயன்று சற்று தவறவிட்டார்.
பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் வலைக்கு மாறிய ரோஹித் சர்மா, அடுத்தடுத்து எவ்வித சிரமமுமின்றி நேராக சிக்சர்களை விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுமார் 20 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் ரோஹித் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர் தனக்கான இலக்கை தானே நிர்ணயித்து விளையாடி வருகிறார். ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் ஒரு சதமாவது அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
