ரோஹித் சர்மா செய்த செயல்.. கொண்டாடிய ரசிகர்கள்.. பவுண்டரி லைன் அருகே யோசிக்காமல் பாய்ந்த ஹிட்மேன்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா மைதானத்தில் பறந்து வந்து பவுண்டரியைத் தடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். 39 வயது ஆகி விட்டது, ஃபார்ம் இல்லை, அதனால் இனி இந்திய ஒருநாள் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க தேர்வுக் குழு மறுத்துவிட்டது என செய்திகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 42வது ஓவரின் முதல் பந்தை அர்ஷ்தீப் சிங் வீசினார். அதனை இங்கிலாந்தின் ஜோ ரூட் கவர் திசையில் பவுண்டரியை நோக்கி அடித்தார். பந்து வேகமாக பவுண்டரி எல்லையை நோக்கிச் சென்றது. அப்போது டீப் பாயிண்ட் திசையில் இருந்து மின்னல் வேகத்தில் ஓடி வந்த ரோஹித் சர்மா, வலதுபுறமாக காற்றில் பறந்து 'டைவ்' அடித்து பவுண்டரியைத் தடுத்து நிறுத்தினார்.

இதன் மூலம் இந்திய அணிக்கு 2 ரன்கள் மிச்சமானது. 39 வயதிலும் ரோஹித் சர்மாவின் இந்த அர்ப்பணிப்பு மற்றும் சுறுசுறுப்பைக் கண்ட லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் "ரோஹித், ரோஹித்" என்று முழக்கமிட்டு மைதானத்தையே அதிர வைத்தனர்.
முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேக்கப் பெத்தேல் 91 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை, பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பவுண்டரி எல்லை அருகே நின்றிருந்த ரோஹித் சர்மா மிக நேர்த்தியாக கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 387 ரன்கள் குவித்தது.
ரோஹித் சர்மாவின் இந்த ஃபீல்டிங் திறனை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். பிசிசிஐ ரோஹித் சர்மாவை 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை அணியில் வைத்து இருக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
