டெல்லி : ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 4 ஆண்டுகளாக இருந்துவருகிறார் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா.
முன்னதாக கடந்த 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரிக்கி பாண்டிங் இருந்தபோது, அவருக்கு கீழ் தான் விளையாடிய அனுபவம் தனக்கு மேஜிக் போன்று இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இதேபோல கடந்த 2011ல் உலக கோப்பை தொடரில் தான் இடம்பெறாதது தனக்கு தற்போதுவரை வருத்தம் தரக்கூடியதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் தன்னுடைய துவக்க ஆட்டக்காரர் என்ற இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பவர் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின்மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். தற்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனுடன் ரோகித் சர்மா மேற்கொண்ட உரையாடலில் பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய மனம்திறந்து பகிர்ந்து கொண்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோகித் சர்மா. இவருக்கு முன்னதாக அந்த அணியின் கேப்டனாக கடந்த 2013ல் ரிக்கி பாண்டிங் இருந்தார். அந்த நேரத்தில் தான் ரிக்கியுடன் செலவழித்த காலங்கள் எல்லாம் மேஜிக் போல இருந்ததாக தற்போது ரோகித் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல்கள் எல்லாம் அடங்கியவுடன் கண்டிப்பாக நடக்கும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். நாளை மறுதினம் திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் 2020 சீசன், தற்போது கொரோனா வைரஸ் பீதி காரணமாக அடுத்த மாதம் 15ம் தேதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் மோசமான காலமாக ரோகித் எதை கருதுகிறார் என்ற பீட்டர்சன் கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா, உலக கோப்பை தொடரில் தான் தேர்ந்தெடுக்கப்படாத காலகட்டமே மோசமான காலகட்டம் என்று கூறியுள்ளார் ரோகித். ஆனால் அதற்கு சிறப்பாக விளையாடாத தன்னுடைய தவறுகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.