விடைபெறும் ரோஹித் சர்மா? முன்பே சொன்ன பிசிசிஐ.. இதுதான் கடைசி சர்வதேச போட்டி.. சோகத்தில் ரசிகர்கள்
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 19 அன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள 3வது ஒருநாள் போட்டியே, இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது ரோஹித் சர்மா ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரை மனதில் வைத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ள பிசிசிஐ தேர்வு குழு, ரோஹித் சர்மாவிடம் தங்களது திட்டத்தை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டது. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு அவரைத் தங்களது எதிர்காலத் திட்டங்களில் சேர்க்கப் போவதில்லை என்றும், அவரது ஓய்வு முடிவை அவரே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் தேர்வு குழுவினர் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் இணைந்து நடத்திய ஆலோசனையில் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவால் ரோஹித் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க தன்னை நிரூபிக்க வேண்டிய இந்த சமயத்தில் அவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமாக சொதப்பி இருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் 11 ரன்களும், 2வது ஒருநாள் போட்டியில் 47 பந்துகளில் 26 ரன்களும் மட்டுமே எடுத்துத் தனது பழைய அதிரடி ஆட்டத்தை இழந்து, பந்துவீச்சை எதிர்கொள்ளவே முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த ஆட்டம் தான் ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2024 ஜூன் 29 அன்று டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சில மணி நேரங்களில் டி20 கிரிக்கெட்டில் இருந்தும், பின்னர் 2025 மே 7 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு அவரது ஒருநாள் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்ஸ் மைதானத்தில் அவர் கடைசிப் போட்டியில் ஆடப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ரோஹித் சர்மா இந்தப் போட்டியுடன் ஓய்வை அறிவிப்பாரா? அல்லது பிசிசிஐ அவரை நீக்குமா? என்பது குழப்பத்தில் உள்ளது.
ரோஹித் ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும் இந்திய அணி நிர்வாகம் அவரை இனி தேர்வு செய்யாது என்ற நிலையே உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டின் மாபெரும் ஜாம்பவானான 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவின் சரித்திரப் பயணம் லார்ட்ஸ் மைதானத்துடன் முடிவுக்கு வரவுள்ளது கிரிக்கெட் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

