மும்பை: ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மீது ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் எழுந்து இருக்கும் நிலையில், உள்ளூர் போட்டிகளில் ஆடி, மீண்டும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என பிடிவாதமாக இருக்கிறார். அதற்காக ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இடம் பிடித்து இருக்கும் ரோஹித், 17 வயது வீரரின் வாய்ப்பை வீணடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் கிளம்பி உள்ளது.
மும்பை மாநில அணியில் இடம் பெற்று ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். இந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 28 ரண்களும் மட்டுமே எடுத்தார்.

ஏற்கனவே, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அவர் மோசமாக விளையாடி இருந்த நிலையில் தற்போது உள்ளூர் போட்டியிலும் தனது மோசமான பேட்டிங் ஃபார்மை தொடர்ந்து இருக்கிறார். ரோஹித் சர்மாவுக்கு மும்பை அணியில் இடம் அளிக்க வேண்டி 17 வயது துவக்க வீரரான ஆயுஷ் மாத்ரே அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன் குவித்த இரண்டாவது வீரராக இருப்பது ஆயுஷ் மாத்ரே தான். அவர் 5 போட்டிகளில் 408 ரன்கள் குவித்து இருக்கிறார். இரண்டு சதங்களையும் அடித்து இருக்கிறார். இந்த 17 வயது வீரரின் பேட்டிங் சராசரி 45.33 என்பதாக உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் ஆயுஷ் மாத்ரே மும்பை அணியின் துவக்க வீரராக சிறப்பாக ஆடி இருந்தார். கடைசி போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார். ஆனால், ரோஹித் சர்மாவுக்கு இடம் அளிக்க வேண்டி அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த 17 வயது வீரருக்கு பதிலாக மும்பை அணியில் ஆடிய சர்வதேச அனுபவம் உள்ள ரோஹித் சர்மா வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்து இருப்பதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணியிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரோஹித் சர்மா தற்போது மாநில அணியிலும் அதையே செய்திருக்கிறார் என விளாசி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மும்பை அணியின் அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் சொதப்பினர்.
ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்குர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் அரை சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்து இருக்கிறார். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவரை 2025 ஐபிஎல் தொடரிலும் எந்த அணியும் வாங்கவில்லை.