துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் தனித்தனியாக வெவ்வேறு இந்திய நகரங்களுக்கு வந்து அடைந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா இரவு நேரத்தில் மும்பைக்கு வந்த நிலையில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரவீந்திர ஜடேஜா தனது நகரத்துக்கு செல்லாமல், சென்னைக்கு வந்தார்.
2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி மொத்தமாக மும்பையில் இறங்கியது. மும்பை விமான நிலையத்திலிருந்து வான்கடே மைதானத்திற்கு இந்திய வீரர்கள் திறந்த வெளி பேருந்தில் பெரும் மக்கள் கூட்டத்துக்கு இடையே பயணம் செய்தனர்.

ஆனால், இந்த முறை அப்படி எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை இந்த நிலையில் இரவு நேரத்தில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக வெவ்வேறு நகரங்களை வந்து அடைந்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மும்பையில் வந்து இறங்கினார். இரவு நேரத்திலும் அவரை வரவேற்க பெரும் அளவில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.
வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டி நேராக சென்னைக்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இந்திய வீரர்களும் வெவ்வேறு நேரங்களில் துபாயிலிருந்து இந்தியாவுக்கு வந்து அடைய உள்ளனர்.
இந்த முறை பிசிசிஐ எந்த கொண்டாட்டங்களையும் நடத்தாதது ஏன்? என்ற எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. இந்திய வீரர்கள் அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர். 2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 அன்று தொடங்க உள்ளது. அப்போது முதல் மே 25 வரை ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.
ஏற்கனவே, பல ஐபிஎல் அணிகளும் தங்களின் பயிற்சி முகாமை துவக்கிவிட்டன. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறாத வீரர்கள் அந்த பயிற்சி முகாம்களில் பங்கேற்று உள்ளனர். தற்போது இந்திய வீரர்களும் தங்களின் ஐபிஎல் அணிகளின் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய வீரர்கள் இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடிவிட்டு, அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடியதால் சோர்வடைந்து இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கான கொண்டாட்டங்களை நடத்தாமல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்திய அணி வீரர்கள் அடுத்து ஐபிஎல் பயிற்சி முகாம்களில் பங்கேற்பதற்கு முன் சில நாட்கள் ஓய்வு பெற வேண்டியது அவசியம் என்பதாலும் பிசிசிஐ பெரிதாக எந்த கொண்டாட்டத்தையும் தற்போது நடத்தவில்லை என சிலர் கூறுகின்றனர்.