மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அவர்களுக்கு ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடைசியாக 2025 ஐபிஎல் தொடரில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு அவர்கள் எந்த சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்தச் சூழலில், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக இந்தியா 'ஏ' அணி விளையாட உள்ள ஒருநாள் தொடரில் அவர்கள் இருவரும் பங்கேற்றால் மட்டுமே, அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் இந்தியா 'ஏ' அணி ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்தியா 'ஏ' அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. விராட் கோலி அப்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர் திறன் செயல் மையத்துக்கு வந்து உடற்தகுதி சோதனைகளை மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 2025 மே மாதத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். அதற்கு முன்னதாகவே 2024 டி20 உலகக் கோப்பையின் போது அவர்கள் இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்து இருந்தனர். தற்போது 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை மனதில் வைத்து அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவதாக அறிவித்து இருக்கின்றனர்.
இதில் ரோஹித் சர்மாவால் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை இந்திய அணியில் நீடிக்க முடியுமா? என்ற கேள்வி உள்ளது. ஏனெனில், அப்போது அவருக்கு 40 வயது ஆகி இருக்கும். அவர் இடைப்பட்ட காலத்தில் அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், தற்போதைய இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இளம் வீரர்களுக்கே அதிக வாய்ப்பு அளிக்க நினைக்கிறார். அதற்கு ஏற்ப இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை நியமிக்க அவர் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
முதற்கட்டமாக சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆகிவிட்டார். அடுத்து அவர் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. தற்போது சுப்மன் கில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.