மும்பை : விராட் கோலி - ரோஹித் சர்மா இன்று ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். என்னதான் ரோஹித் சர்மா கேப்டன் என்றாலும், எந்த தயக்கமும் இன்றி விராட் கோலியின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுகிறார்.
ஆனால், 2019இல் இருவருக்கும் இடையே விரிசல் எழுந்ததாக பரபரப்பு எழுந்தது. அதை நிரூபிப்பது போல பல சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக, 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் போது அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலியின் அணித் தேர்வு மற்றும் சில முடிவுகளில் ரோஹித் சர்மா விருப்பமின்றி இருந்ததாக தகவல்கள் வெளியானது.

அதன் உச்சமாக இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதியில் தோல்வி அடைந்த பின் ரோஹித் சர்மா, விராட் கோலியுடன் பேசவில்லை எனவும், அணியில் சில வீரர்கள் ரோஹித் பக்கமும், சில வீரர்கள் விராட் கோலி பக்கமும் இருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகின. சமூக ஊடகங்களில் ரோஹித் சர்மா, விராட் கோலியை ஃஅன்பாலோ செய்து விட்டார் என்றும் கூட செய்தி வெளியானது.
உலகக்கோப்பை முடிந்த உடன் நடைபெற்ற டி20 தொடரில் கேப்டனாக இருந்த கோலி ஓய்வு பெறுவார் எனவும், அவருக்கு பதில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் எனவும் கூறப்பட்ட நிலையில், கடைசி நாளில் விராட் கோலி ஓய்வு பெறப் போவதில்லை அவரே அந்த தொடரில் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணம், ரோஹித் சர்மா கேப்டனாக வந்து விடக் கூடாது என்பதே என அப்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், என்ன நடந்தது என அந்த காலகட்டத்தில் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஸ்ரீதர் தனது "கோச்சிங் பியான்ட்" என்ற புத்தகத்தில் கூறி இருக்கிறார். அப்போது கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் என சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களில் வெளியான செய்திகள் அவர்களை பாதித்து இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் அது பெரிதாக மாற இருந்த தருணத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு முடிவு எடுத்தார்.
அமெரிக்காவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஆடச் சென்றது. அப்போது அமெரிக்கா சென்ற உடன் முதல் வேலையாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை தன் அறைக்கு அழைத்தார் ரவி சாஸ்திரி. அவர்கள் இருவரிடமும் சமூக ஊடகங்களில் நடப்பதை விட்டு விடுங்கள். ஆனால், இது எல்லாவற்றையும் பின்னே வைத்து விட்டு, இருவரும் ஒன்றாக இணைந்து முன்னேறிச் செல்லுங்கள் என கூறி இருக்கிறார் ரவி சாஸ்திரி.
விஷயம் பெரிதாக வெடிக்கும் முன்னே ரவி சாஸ்திரி செய்த இந்த விஷயம் காரணமாக அவர்கள் மீண்டும் இயல்பாக பேசிக் கொள்ளத் தொடங்கினர். அதன் பின் அவர்கள் இடையே விரிசல் என்ற பேச்சுக்கள் குறைந்தன. அன்று ரவி சாஸ்திரி யோசிக்காமல், நேரம் தாழ்த்தாமல் செய்த அந்த விஷயத்தால் தான் கோலி - ரோஹித் சர்ச்சை முடிவுக்கு வந்தது என ஸ்ரீதர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.