சிட்னி: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அவர்களாகவே விலக மாட்டார்கள், ஓய்வையும் அறிவிக்க மாட்டார்கள். ஆனால், எப்போது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவை தேர்வு குழு எடுக்கும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணி சமீப காலமாக படுதோல்விகளை சந்தித்து வருகிறது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0 - 3 என படுதோல்வி அடைந்து இருந்தது. அடுத்து ஆஸ்திரேலியாவில் 1 - 3 என தோல்வி அடைந்து இருந்தது.

இதை அடுத்து சரியாக பேட்டிங் செய்யாத விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை என அறிவித்து இருக்கிறார் ரோஹித்.
விராட் கோலி 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், அவர்கள் இருவரும் மோசமாக ஆடி வருவது இந்திய அணிக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் முன்னாள் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் சுனில் கவாஸ்கர் அவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தனர்.
அவர்கள் இருவரும் தாங்களாகவே ஓய்வை அறிவிக்க மாட்டார்கள், பிசிசிஐ-யும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது என அவர்கள் கூறி இருந்தனர். அது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பிசிசிஐ ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தோல்வியால் அதிருப்தியில் உள்ளது. இந்திய அணி தற்போது கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு உள்ளது. இந்திய வீரர்கள் நாடு திரும்பியவுடன் இது குறித்து விவாதிக்கப்படும்." என்றார்.
மேலும், "இர்பான் பதான் மற்றும் சுனில் கவாஸ்கர் பேசியதை கேட்டேன். அவர்களாகவே ஓய்வு பெற மாட்டார்கள், பிசிசிஐயும் அவர்களை ஓய்வு பெறுமாறு கேட்காது என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் சரியான நேரம் வரும்போது தேர்வு குழுவினர் சரியான முடிவை எடுப்பார்கள்." என்று அந்த அதிகாரி கூறி இருக்கிறார். இதன் மூலம், கோலி, ரோஹித்துக்கு இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என மறைமுகமாக கூறி இருப்பதாக தெரிகிறது.