மும்பை: இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டிலும் (ODI) அவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
2027ஆம் ஆண்டு உலகக் கோப்பையை மனதில் வைத்து அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், பிசிசிஐயின் புதிய விதிமுறைகள் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ முன்பே கடுமையான உத்தரவைப் பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவின்படி, ஒருநாள் அணிக்குத் தேர்வாக விரும்பும் வீரர்கள், இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு ஒருநாள் தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அவர்கள் ரஞ்சி டிராபியில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற ஒரு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியில் இளம் திறமையாளர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2027 உலகக் கோப்பையை மனதில் வைத்து, புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களைத் தயார்படுத்த பிசிசிஐ தேர்வாளர்களும், நிர்வாகமும் விரும்புவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, மூத்த வீரர்களான ரோஹித் மற்றும் கோலிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா மற்றும் 36 வயதாகும் விராட் கோலி ஆகியோர், 2027 உலகக் கோப்பையின் போது 40 வயதை நெருங்கிவிடுவார்கள். எனவே, அவர்களது உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறன் குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரைவில் இரு வீரர்களுடனும் பிசிசிஐ வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் மற்றும் கோலி இருவரும் இந்திய கிரிக்கெட்டிற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இருவரும் கிட்டத்தட்ட கிரிக்கெட்டின் பெரும்பாலான சாதனைகளை படைத்துள்ளனர். இதனால், அவர்களை ஓய்வுபெறச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றாலும், அணியின் எதிர்கால நலன் கருதி சில கடினமான முடிவுகள் எடுக்கப்படலாம்.
இந்தியா அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபரிலும், பின்னர் டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்குப் பிறகு, விஜய் ஹசாரே டிராபியில் ரோஹித்தும், கோலியும் பங்கேற்பார்களா என்பதைப் பொறுத்தே, அவர்களது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் அமையும்.
ஒருவேளை அவர்கள் அந்தத் தொடரில் விளையாடவில்லையெனில், அதுவே அவர்களின் ஒருநாள் கிரிக்கெட் பயணத்தின் முடிவாக இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.