மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரும் 2026 - 27 வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளது. இதில் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு சம்பள குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐ தனது ஒப்பந்த முறைகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யவுள்ளது. குறிப்பாக, அதிக ஊதியம் வழங்கும் 'ஏ பிளஸ்' (A+) பிரிவை நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரிவில் இடம்பெறத் தேவையான தகுதிகளை, அதாவது மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடும் வீரர்கள் தற்போது குறைவாகவே உள்ளனர். இதனால் இந்த உயர்ந்த பிரிவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, "நாங்கள் ஒரு பிரிவை நீக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏ பிளஸ் பிரிவில் இடம்பெறத் தகுதியான வீரர்கள் தற்போது மூன்று வடிவங்களிலும் விளையாடுவதில்லை. அவர்கள் குறிப்பிட்ட வடிவங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எனவே தகுதியான வீரர்கள் இல்லாததால் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இது முற்றிலும் கிரிக்கெட் சார்ந்த முடிவு" என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தற்போது அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடுவதில்லை. இதனால் அவர்கள் ஏ பிளஸ் பிரிவில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்குக் கிடைத்து வந்த 7 கோடி ரூபாய் ஆண்டு ஊதியம், இனி 3 கோடி ரூபாயாகக் குறைய வாய்ப்புள்ளது.
பிசிசிஐயின் புதிய திட்டத்தின்படி, அவர்கள் 'பி' (Grade B) பிரிவுக்கு மாற்றப்படலாம். இதனால் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இது கிட்டத்தட்ட 57 சதவீத சம்பள குறைப்பு ஆகும்.
தற்போதைய ஒப்பந்த முறைப்படி, ஏ பிளஸ் பிரிவு வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், சி பிரிவு வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. இது போட்டித் தொகையைத் தவிர்த்து வழங்கப்படும் நிலையான ஊதியமாகும்.
புதிய மாற்றத்தின் மூலம் ரவீந்திர ஜடேஜாவின் சம்பளமும் குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், மூன்று வடிவங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கேப்டன் சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் 'ஏ' பிரிவில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
தற்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். எனவே, அவர்களுக்கான சம்பள குறைப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதே சமயம், சுப்மன் கில், பும்ரா போன்ற மூன்று விதமான அணிகளிலும் ஆடும் முன்னணி வீரர்களுக்கும் சேர்த்து ஏ பிளஸ் பிரிவுக்கான 7 கோடி சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது.