மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் மும்பை மாநில கிரிக்கெட் வீரர் முஷீர் கானை நேரில் சந்தித்து அவர் விரைவில் காயத்தில் இருந்து மீண்டு வர வாழ்த்தினார். இதை அடுத்து ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் இது அந்த இளம் வீரருக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்; அந்த வகையில் ரோஹித் சர்மா ஒரு சிறந்த தலைவனுக்கு அடையாளமாக இந்த செயலை செய்து இருக்கிறார் என பாராட்டி வருகின்றனர்.
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் சர்ஃபராஸ் கானின் சகோதரர்தான் இந்த முஷீர் கான். 19 வயதே ஆகும் நிலையில் அவர் பிசிசிஐ-யின் கவனத்தை ஏற்கெனவே ஈர்த்து இருக்கிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் ரஞ்சி ட்ராபி தொடரில் மும்பை அணிக்காக முஷீர் கான் அறிமுகம் ஆனார். ரஞ்சி ட்ராபி நாக் அவுட் போட்டிகளில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் குவித்து அந்த அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இதை அடுத்து துலீப் ட்ராபி தொடர், இந்தியா ஏ ஆகிய அணிகளிலும் வாய்ப்புகளை பெற்றார். அடுத்து இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியில் ஆட இருந்தார். அதற்கு முன்னதாக அவர் கார் விபத்தில் சிக்கினார். அவருக்கு கழுத்தில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால், சில மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
விரைவில் 2024 - 25 ரஞ்சி ட்ராபி தொடர் துவங்க உள்ள நிலையில், முஷீர் கானால் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாது என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவரை நேரில் சந்தித்து, அவர் விரைவில் குணமாக வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த செயலை ஒரு இந்திய அணியின் கேப்டன் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆனால், தனது மாநிலத்தை சேர்ந்தவர் என்பதோடு, விரைவில் இந்திய அணியில் இடம் பெறக்கூடிய வாய்ப்பு உள்ள ஒரு இளம் வீரரை நேரில் சந்தித்து அவர் காயத்திலிருந்து குணமடைய வாழ்த்து சொல்வது பெரிய விஷயம் என ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது நாளை முதல் அதற்கான பயிற்சி முகாம் துவங்க உள்ளது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிற இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் அந்த முகாமில் பங்கேற்க உள்ளனர்.