மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு பின் கவுதம் கம்பீர் முக்கிய காரணமாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இளம் கேப்டனை நியமனம் செய்தால், இந்திய அணியின் கட்டுப்பாடு முழுமையாக கம்பீர் வசம் இருக்கும் என்பதால், சுப்மன் கில்லை முன்னிறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டதை போல், ரோகித் சர்மாவும் நீக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த 7 மாதங்களில் எப்படி ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கலாம் என்று அஜித் அகர்கரை நோக்கி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் இருந்து நீக்கியதற்கு பின்னணியில் கம்பீரின் கைகளும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்திய கிரிக்கெட்டின் 3 அணிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க கம்பீர் விரும்புகிறார்.
ஆனால் ரோகித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த கேப்டன் இருக்கும் போது, அது கம்பீருக்கு சிக்கலை உருவாக்கும். இத்தனை ஆண்டுகளாக ரோகித் சர்மா பின்பற்றி வந்த ஃபார்முலாவையே பின்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் கேப்டனுக்காக அதிக அதிகாரம் என்பதால், கம்பீர் ஒரு ஆலோசகராகவும், திட்டங்களை கொடுப்பவராகவும் மட்டுமே இருக்க முடியும்.
அப்படிதான் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற 6 மாதங்கள் செயல்பட்டார். இலங்கை சுற்றுப்பயணம், நியூசிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கம்பீரின் பல ஆலோசனைகளை ரோகித் சர்மா ஏற்கவில்லை. இதனால் புதிதாக கேப்டனாக வரும் நபரை, தமது கட்டுப்பாட்டில் வைக்க பிசிசிஐ முடிவு எடுத்து சுப்மன் கில்லை கொண்டு வந்தது.
சுப்மன் கில்லுக்கு கேப்டன்சி அனுபவம் குறைவாக இருப்பதால், அங்கு கம்பீரின் அத்தனை திட்டங்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்ததே கம்பீர் தான் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் ரோகித் சர்மாவை ஒரே அடியாக நீக்காமல், ஃபார்மை இழந்த பின் நீக்கலாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர்.
டி20 கிரிக்கெட் அணியிலும் முதலில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகும் சூழல் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக முன்னிறுத்தியவர் கவுதம் கம்பீர். ஏற்கனவே கேகேஆர் அணியில் இருந்த போதே சூர்யகுமார் யாதவுடன் பணியாற்றி இருந்த அனுபவம் காரணமாக, கம்பீர் அவருக்கு பொறுப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.