லண்டன் : ஐசிசி தொடர்களில் இந்திய அணி கோப்பையை 10 ஆண்டுகளாக வெல்லவில்லை என்ற காரணத்தினால் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பை வென்றது என்பதற்காக ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக பிசிசிஐ நியமனம் செய்தது.
ரோகித் சர்மா வந்தவுடன் அணியே தலைக் கீழ் மாறிவிடும். கோப்பைகளால் பிசிசிஐ அலுவலகம் நிரம்பிவிடும். இனி இந்திய கிரிக்கெட் அணிக்கு ரட்சகன் ரோகித் தான் என்று ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்தனர். அதற்குத் தகுந்தார் போல் 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையை விராட் கோலி இல்லாமலேயே ரோகித் சர்மா கேப்டன் ஆக இருந்து வென்றார். ஆனால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மிகவும் மோசமாக செயல்பட்டு இருக்கிறது.

இதற்கு விராட் கோலி பரவாயில்லையே என்று ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு அணியை கொண்டு வந்து விட்டு விட்டார். இன்னும் சொல்லப்போனால் ரோகித் சர்மா பல போட்டிகளில் காயம் காரணமாக அணியிலேயே விளையாடவில்லை. மேலும் கேப்டனாக வந்த பிறகு முக்கிய ஆட்டங்களில் ரோகித் சர்மா சரியாக ரன்னும் குவிக்க மாட்டிக்கிறார்.
கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றிலே வெளியேறியது.இதனை அடுத்து 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற்றது. இதில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் படுதோல்வியை தழுவி நடையை கட்டியது.
தற்போது 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரை இந்திய அணி வந்தது. ஆனால் அதிலும் ரோகித் படை வெற்றி பெறவில்லை. இதனால் 2023 ஆம் ஆண்டு 50 உலகக் கோப்பை மட்டும் தான் தற்போது எஞ்சி இருக்கிறது.இதில் ரோஹித் சாதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் கேப்டன்ஷி தொடர்பான இந்த குற்றச்சாட்டுக்கு கருத்து தெரிவித்துள்ள ரோஹித் சர்மா ரசிகர்கள், இந்தியா தோல்வி அடைந்த இந்த முக்கிய தொடர்களில் எல்லாம் பும்ரா போன்ற பந்துவீச்சாளர் இல்லை என்றும் இதனால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதேபோன்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீதும் தற்போது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. வரும் ஆசிய கோப்பையிலாவது இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.