மும்பை: 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் ரோகித் சர்மா சேர்க்கப்படாததற்கான காரணம் குறித்த உண்மை வெளிவந்துள்ளது.
2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று அசத்தியது. தோனி தலைமையில் ஆடிய இந்திய அணியில் இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் சரிவர கலந்து இருந்தனர். அதேபோல் ஆல்ரவுண்டர்களும் அதிகமாக இருந்தனர். இது இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த அணியில் இளம் வீரரான ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவே இல்லை. இத்தனைக்கும் விராட் கோலிக்கு முன்பாகவே இந்திய அணிக்காக விளையாடியவர் ரோகித் சர்மா. 2007 டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மா முக்கிய பங்காற்றி இருப்பார். இருப்பினும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படாதது ஆச்சரியம் அளித்தது.
இன்று வரை ரோகித் சர்மா, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து புலம்பி வருகிறார். இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை தேர்வு செய்த தேர்வுக் குழு நிர்வாகி, ரோகித் சர்மா தேர்வு செய்யப்படாதது ஏன் என்ற உண்மையை கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் தேர்வுக் குழு நிர்வாகி ராஜா வெங்கட் பேசுகையில், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டணித்தில் அனைவரும் அமர்ந்து இருந்தோம். அப்போது ரோகித் சர்மாவை தேர்வு செய்ய வேண்டும் என்று அனைவரும் அறிவுறுத்தினோம். பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் ரோகித் சர்மாவை தேர்வு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
ஆனால் ரோகித் சர்மா தேவையில்லை என்பதில் கேப்டன் தோனியும் பிடிவாதமாக இருந்தார். அவர் ரோகித் சர்மாவுக்கு பதில், சுழற்பந்துவீச்சாளரான பியூஷ் சாவ்லாவின் தேவையை உணர்ந்திருந்தார். அதன் காரணமாகவே ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை மிஸ் செய்த ரோகித் சர்மா, 2015ஆம் ஆண்டு தொடக்க வீரராக உலகக்கோப்பையில் விளையாடினார். அதன்பின் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் 5 சதங்களை விளாசி ஒன் மேன் ஷோ காட்டினார். தற்போது அடுத்த உலகக்கோப்பையில் ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.