மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாட ஆர்வமாக இருப்பதாக ரோஹித் சர்மா கூறி வந்த நிலையில், அவரின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி 2022ஆம் ஆண்டு விலகிய பின், புதிய கேப்டனாக கொண்டு வரப்பட்டவர் ரோஹித் சர்மா. அந்த நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு போதுமான அனுபவம் கூட இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டை புரிந்து கொண்டார்.

அதற்கு முன்பாக ரோஹித் சர்மாவை எப்படியாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டும் என்று விராட் கோலி எவ்வளவோ வாய்ப்புகளை அளித்தார். அதற்காக ரஹானே, புஜாராவை கூட பெஞ்ச் செய்தார். ஆனாலும் ரோஹித் சர்மா அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவில்லை. ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த டெஸ்ட் தொடராக அமைந்தது இங்கிலாந்து சுற்றுப்பயணம் தான்.
ஓவல் மைதானத்தில் தொடக்க வீரராக களமிறங்கி சதம் விளாசி இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகத்தை கொடுத்தவர். அதன்பின் ரோஹித் சர்மா உள்நாட்டில் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான இன்னிங்ஸை ஆடி இருக்கிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா கேப்டனாக மோசமாக செயல்பட்டு வந்திருக்கிறார்.
2012ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் ரோஹித் சர்மாவின் வரவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ஒற்றை இலக்கத்திலேயே ரன்களை சேர்த்து வந்தார்.
ஒரு கட்டத்தில் கம்பீரின் அதிருப்தி காரணமாக வேறு வழியின்றி கடைசி டெஸ்ட் தொடரில் இருந்து தாமாக விலகி கொண்டார். இந்த டெஸ்ட் போட்டிக்கு பின்னரே ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை.
இதனால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை புதிய கேப்டனுடன் தொடங்க பிசிசிஐ விரும்பியதாக தெரிகிறது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெற்றது ரோஹித் சர்மாவுக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் விளையாட ரோஹித் சர்மாவும் விருப்பம் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ரோஹித் சர்மாவுக்கு 38 வயதாகிவிட்டதால், அவரை வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடுவதில் எந்த பிரயோஜனும் இல்லை. பேட்டிங்கிலும் மோசமான ஃபார்மில் இருப்பதால், கேப்டன்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக கம்பீர், அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் ரோஹித் சர்மாவிடம் ஆலோசித்ததாக தெரிகிறது. அப்போது இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா, திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.