கொழும்பு: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 250வது ஒருநாள் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்கவுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி நாளை நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொழும்பு மைதானத்தில் 2வது பேட்டிங் செய்யும் அணிகள் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கிறது. இதனால் ஒளிக்கு கீழ் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இதனிடையே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் நாளைய போட்டியில் இந்திய அணியின் காம்பினேஷன், அக்சர் படேலுக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் களமிறங்குவதன் மூலம் ரோகித் சர்மா முக்கிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 250வது போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கவுள்ளார். இவருக்கு முன் சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, அசாருதீன், யுவராஜ் சிங், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் இந்திய அணிக்காக 250 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர்.
இதுவரை 249 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 10,031 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலிக்கு பின் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்தோடு, சச்சினின் சாதனையையும் முறியடித்தார். அதேபோல் நாளைய போட்டியில் ரோகித் சர்மா வென்று ஆசியக் கோப்பையை கைப்பற்றினால், 250வது ஒருநாள் போட்டி மறக்க முடியாத போட்டியாக அமையும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.