மும்பை : தோனிக்குப் பிறகு இந்தியாவுக்கு ஐசிசி கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்று இருக்கிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த ரோகித் சர்மா இனி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட போவது இல்லை என ஓய்வு முடிவை அறிவித்தார்.
ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயது ஆகிவிட்டது. இந்த சூழலில் ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகவும் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் ஆகவும் தொடர்கிறார். டெஸ்ட் போட்டியில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறுகிறது.

கடந்த முறை கேப்டன் ஆக ரோகித் சர்மா இந்த கோப்பையை தவறவிட்ட நிலையில், இம்முறை மீண்டும் இந்த தொடரை வெல்ல ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது ரோகித் சர்மா தன்னுடைய இறுதி கிரிக்கெட் அத்தியாயத்தில் உள்ள நிலையில் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து அவருடைய சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ள கருத்தை தற்போது பார்க்கலாம்.
ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிவிட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிவடைந்த உடன் ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நினைக்கின்றேன். ஏனென்றால் அவருடைய வயது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும். 2027 ஆம் ஆண்டு நடைபெற உலக கோப்பை போட்டியில் 100% ரோகித் சர்மா விளையாடுவார் என்று நான் உறுதி அளிக்கின்றேன். இன்னும் 50 ஓவர் உலகக் கோப்பையை ரோகித் சர்மா கைப்பற்றாததால் அவர் இந்த முடிவை எடுப்பார் என நினைக்கின்றேன். ரோகித் சர்மா தற்போது விளையாடி வரும் கிரிக்கெட்டை பார்க்கும் போது நம்பவே முடியவில்லை என்று தினேஷ் லாட் கூறியுள்ளார்.
இதுவரை உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகளில் 28 ஆட்டங்கள் விளையாடிய ரோகித் சர்மா 1575 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 60 ஆகும். 2027 உலக கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடினால் அவருக்கு அப்போது வயது 40 ஆக இருக்கும்.