ரோகித் சர்மா-வை தொந்தரவு செய்ய கூடாது.. அகார்கர், கம்பீருக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை
மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் குறித்து பிசிசிஐ தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து தலைமை தேர்வாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தொந்தரவு செய்ய கூடாது என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த யூகங்களை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த பேச்சுக்கும் இடமில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ரோஹித் சர்மாவுக்கு கடைசி தொடராக இருக்கலாம் என்று செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவரது எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்தன. மேலும், 2027-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் திட்டங்களில் அவர் இல்லை என்று தலைமை தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
இருப்பினும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் ஆட்டத்தில் 110 பந்துகளில் 138 ரன்கள் குவித்து, 38 வயதான ரோஹித் சர்மா வலுவான பதிலடி கொடுத்தார். இது குறித்து பேசிய ராஜீவ் சுக்லா, "ரோஹித் சர்மா எங்கள் அணியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். தொடர்ந்து விளையாடி வருகிறார். ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் செய்திகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. தற்போதைய நிலவரப்படி, அவர் ஓய்வு பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தார்.
"ஒவ்வொருவருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு, ஆனால் அணியில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்வுக்குழுவினரிடம் உள்ளது. இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு போட்டிகளில் வென்று வருகிறது, எனவே தற்போதைக்கு மாற்றங்கள் எதுவும் தேவைப்படாது" என்று அவர் கூறினார்.
தனது எதிர்கால திட்டங்கள் குறித்து தேர்வுக்குழுவினர் கூறிய கருத்தால் ரோஹித் அதிருப்தி அடைந்ததாகவும், இந்த விஷயத்தில் தலையிடுமாறு பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகளை அவர் அணுகியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த பின்னணியில் ராஜீவ் சுக்லாவின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது இந்த விவகாரத்தில் கூடுதல் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
