மும்பை: இந்திய கிரிக்கெட்டின் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா, கேப்டன் பதவி பறிப்பு, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, உடற்தகுதி குறித்த தொடர் விமர்சனங்கள் என காயப்பட்ட சிங்கமாக ஓரங்கட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது நம்பமுடியாத உடல் மாற்றத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது மன வேதனைக்கு பேட்டால் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறார். அவரது மன வேதனை குறித்து முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சில தகவல்களை கூறி இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு வரை, ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்த கேலிகளும், விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக இருந்தது. டெஸ்ட் தொடர்களில் அவர் சரியாக ரன் குவிக்காத போது அது பெரும் விவாதமாக இருந்தது. இதனிடையே அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடும் முடிவில் இருந்தார்.
இந்த நிலையில் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் அவர் தோன்றியபோது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆச்சரியத்தில் உறைந்தது. சுமார் 8 கிலோ எடையைக் குறைத்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த உடற்கட்டுடன், புத்துணர்ச்சியுடன் காட்சியளித்தார் ரோஹித்.

38 வயதில் அவரது இந்த மாற்றம், ஓய்வு குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது வெறும் உடல் மாற்றம் அல்ல; இது ஒரு சபதம். தன்னுடைய கேப்டன் பதவியை சுப்மன் கில்லுக்கு கொடுத்து அழுத்தம் கொடுக்கும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ-க்கு, 'நான் இன்னும் சோர்வடையவில்லை' என்று சொல்லாமல் சொல்லும் ஒரு செய்தி என அவரது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
ரோஹித் சர்மாவின் இந்த மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மன வேதனையை, இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பகிர்ந்து கொண்டார். "கடைசியாக ரோஹித் சர்மா இவ்வளவு கடுமையான உடற்பயிற்சி முறையைப் பின்பற்றியது, 2011 உலகக் கோப்பை அணியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகுதான். அந்த நீக்கம், அவரது இதயத்தில் ஒரு ஆழமான, ஆறாத வடுவை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு மன உறுதியை அவரிடம் நான் காண்கிறேன்" என்று பங்கர் கூறியுள்ளார்.
அதாவது 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா நீக்கப்பட்ட போது என்ன வேதனையை அனுபவித்தாரோ அதே வேதனையை இப்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதும் அனுபவிக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, "உடற்தகுதி குறித்து எழுந்த விமர்சனங்கள், அவரை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கவே அவர் இவ்வளவு கடினமாக உழைத்துள்ளார். பசியுடனும், உடற்தகுதியுடனும் ரோஹித் சர்மாவைப் பார்ப்பது ஒரு மிகச் சிறந்த அறிகுறி." என்று சஞ்சய் பங்கர் குறிப்பிட்டார்.
ரோஹித் சர்மா பதிலடி கொடுக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் களம், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர். புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, குறிப்பாக அவர்களது சொந்த மண்ணில், ரோஹித் ஒரு அசைக்க முடியாத சக்தியாகவே திகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 46 போட்டிகளில் 2407 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 57.31. இதில் 8 சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் 30 இன்னிங்ஸ்களில் 1328 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 53.12,. இதில் 5 சதங்கள் அடங்கும். இதை அடுத்து ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் எவ்வளவு ரன் குவிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.