பெர்த்: இந்திய கிரிக்கெட்டின் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா தன் புகைப்படம் ஒன்றால் கேலி செய்யப்பட்டதை அடுத்து பொங்கி எழுந்து ஒரு மாற்றத்தை செய்து இருப்பது பற்றி அவரது நண்பரும், முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் கூறி இருக்கிறார். கேப்டன் பதவி பறிப்பு, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, உடற்தகுதி குறித்த தொடர் விமர்சனங்கள் என காயம்பட்ட சிங்கமாக ஓரங்கட்டப்பட்டிருந்த ரோஹித் சர்மா, தற்போது நம்பமுடியாத உடல் மாற்றத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது வலிகளுக்கு மட்டையால் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறார்.
ரோஹித் சர்மாவின் இந்த திடீர் மாற்றத்திற்குப் பின்னால், அவரை காயப்படுத்திய சம்பவம் உள்ளது என்ற ரகசியத்தை, அவரது நெருங்கிய நண்பரும், பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், மும்பை விமான நிலையத்திலிருந்து ரோஹித் சர்மா வெளியே வந்தபோது, அவரைப் பின்தொடர்ந்த ஊடகத்தினர் மற்றும் ரசிகர்கள் எடுத்த சில புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவின. அந்தப் புகைப்படங்களில், ரோஹித் சற்று உடல் எடை கூடி, ஒரு கிரிக்கெட் வீரருக்குரிய உடற்கட்டுடன் இல்லை என்று கூறி, ஏராளமானோர் அவரைக் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாக்கினர்.
இந்த விமர்சனங்கள், ரோஹித் சர்மாவை தீவிரமாகக் காயப்படுத்தியுள்ளது. "விமான நிலையத்திலிருந்து அவர் வெளியே வரும் சில புகைப்படங்கள் மற்றும் அவரது உடல் எடை அதிகரிப்பது குறித்து நிறைய பேச்சுக்கள் எழுந்தன. அதையெல்லாம் மாற்றி, இன்னும் ஆரோக்கியமாகவும், வேகமாகவும், ஃபிட்டாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம்" என்று அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.
கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால், ரோஹித்தின் ஆட்டத்தில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, அபிஷேக் நாயர் உறுதியாகப் பதிலளித்துள்ளார். "அவர் கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த அணிக்காகவும், தனது சக வீரர்களுக்காகவும் அவர் விளையாடும் விதத்தில் எந்த மாற்றமும் இருக்காது," என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரோஹித் தனது தனிப்பட்ட சாதனைகளைத் துரத்துவதை நிறுத்திவிட்டு, பவர்பிளே ஓவர்களில் அணிக்கு ஒரு அதிரடியான தொடக்கத்தைக் கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். அதே அணுகுமுறை தொடரும் என்று அபிஷேக் நாயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள ரோஹித் சர்மா, தனது சபதத்தை நிறைவேற்றத் தீவிரமாகத் தயாராகி வருகிறார். பெர்த்தில் நடந்த இந்திய அணியின் முதல் பயிற்சி அமர்வில், விராட் கோலியுடன் இணைந்து அருகருகே பேட்டிங் பயிற்சி செய்தார். மேலும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் தீவிரமான ஆலோசனையிலும் ஈடுபட்டார்.
38 வயதான ரோஹித் சர்மாவின் இந்த நம்பமுடியாத மாற்றம், 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. விமர்சனங்களையே தனது வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாற்றும் ரோஹித், ஆஸ்திரேலிய மண்ணில் தனது பேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.