ராஜ்கோட் : கேப்டன் ரோஹித் சர்மா செய்த ஒரு முக்கிய தவறு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது.

இத்தனைக்கும் முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டனாக கே எல் ராகுல் செயல்பட்டார். அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெறவில்லை. அப்போதும் இந்திய அணி வென்று இருந்தது. அதனால், அவர்கள் மூவரும் ஆடும் மூன்றாவது போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என ரசிகர்கள் கருதினர்.
ரோஹித் சர்மா மூன்றாவது போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ் அதிரடி ஆட்டம் ஆடினர். வார்னர் 56 ரன்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக வந்த ஸ்டீவ் ஸ்மித், மார்ஷ் இணைந்து கூட்டணியாக ரன் குவிக்கத் துவங்கினர். 23 ஓவர்களில் எல்லாம் ஆஸ்திரேலியா 176 ரன்களை எட்டியது. கிட்டத்தட்ட ஓவருக்கு 8 ரன்கள் அடித்துக் கொண்டு இருந்தது அந்த ஜோடி.
இந்திய அணியில் அதுவரை பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா பந்து வீசி இருந்தனர். அவர்களில் சுழற் பந்துவீச்சாளர் சுந்தர் மட்டுமே ஓவருக்கு 4 ரன்கள் கொடுத்து கட்டுக் கோப்பாக வீசி இருந்தார். அவருக்கு அடுத்து ஓவருக்கு 6 ரன்கள் என்ற அளவில் கொடுத்து இருந்தார் ஜடேஜா. அதன்படி பார்த்தால் சுழற் பந்துவீச்சுதான் அங்கே வேலை செய்தது.
அப்படியானால் கேப்டன் ரோஹித் சர்மா குல்தீப் யாதவ்வை முன் கூட்டியே பந்து வீச அழைத்து இருக்க வேண்டும். ஆனால், 23 ஓவர்கள் வரை அவருக்கு ஓவர் கொடுக்காமல் இருந்தார் ரோஹித். அது ஏன் என்பதே யாருக்கும் புரியவில்லை. குல்தீப் யாதவ் தன் மூன்றாவது ஓவரிலேயே லாபுஷேன் மிட்ஷெல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு திருப்புமுனை அளித்தார்.
ஆனால், அதற்குள் போட்டி ஆஸ்திரேலியா வசம் சாய்ந்து விட்டது. முதல் 23 ஓவர்கள் வரை ஓவருக்கு 7.5 - 8 ரன்கள் அடித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா குல்தீப் யாதவ் எடுத்த விக்கெட்டுக்கு பின் தொடர்ந்து விக்கெட்டை இழந்து ரன் குவிக்கும் வேகத்தை இழந்தது.
400 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. முக்கிய சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ்வுக்கு முன்பே ஓவர் கொடுத்து இருந்தால் ஆஸ்திரேலியா முன்பே விக்கெட்டை இழந்து இருக்கும் அல்லது ரன் குவிக்கும் வேகத்தை குறைத்து இருக்கும். அந்த வாய்ப்பை குல்தீப் யாதவ்வுக்கு கொடுக்காமல் தவறு செய்து விட்டார் கேப்டன் ரோஹித் சர்மா. இதை அவர் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.
இதை அடுத்து இந்தியா சேஸிங்கில் சொதப்பி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு ரோஹித் சர்மா குல்தீப் யாதவுக்கு சரியான நேரத்தில் ஓவர் கொடுக்காமல் விட்டதும் ஒரு முக்கிய காரணம்தான்.